தோத்திரப் பாடல்கள் கண்ணம்மா (1)

பீடத்தி லேறிக் கொண்டாள் -- மனப்
பீடத்தி லேறிக் கொண்டாள்.

சரணங்கள்

நாடித் தவம் புரிந்து -- பீடுற்ற முனிவரர்
கேடற்ற தென்று கண்டு -- கூடக் கருது மொளி
மாடத்தி லேறி ஞானக் -- கூடத்தில் விளையாடி
ஓடத் திரிந்து கன்னி -- வேடத்தில் ரதியைப்போல்
ஈடற்ற கற்பனைகள் -- காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கு நெஞ்சின் -- ஊடுற்றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப -- வீடொத் தினிமைசெய்து
வேடத்தில் சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி) 1

கண்ணன் திருமார்பிற் -- கலந்த கமலை யென்கோ?
விண்ணவர் தொழுதிடும் -- வீரச் சிங்கா தனத்தே,
நண்ணிச் சிவனுடலை -- நாடுமவ ளென்கோ?
எண்ணத் திதிக்குதடா, இவள்பொன் னுடலமுதம்
பெண்ணி லரசியிவள் -- பெரிய எழிலுடையாள்
கண்ணுள் மணியெனக்குக் -- காத லிரதியிவள்
பண்ணி லினியசுவை -- பரந்த பொழியினாள்
உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி) 2


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 10:32 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே