தமிழியக்கம் - மற்றும் பலர்

அச்சகத்துத் தமிழர்க்கோ
அருந்தமிழில் அன்பிருந்தால்
அச்சி யற்றும்

எச்சிறிய அறிக்கையிலும்,
நூற்களிலும், எதிர்மொழியை
உடையவர் நீக்

கச்சொல்ல லாமன்றோ
எண் எல்லாம் தமிழினிலே
உண்டோ என்றால்

மெச்சுகின்ற ஆங்கில எண்
அல்லாது வேறில்லை
என்கின் றாரோ!

கலைச் சொல்லாக் கத்தாரே
கல்வியினால் நீர் பெற்ற
அறிவை யெல்லாம்

தலைச் சரக்காம் தமிழ்ச் சரக்கைத்
தலைகவிழ வைப்பதற்கோ
விற்கின் றீர்கள்?

மலைச் சறுக்கில் இருக்கின்றீர்
மாத்தமிழர் கண் திறந்து
வாழ்வுக் கெல்லாம்

நிலைச் சரக்கைக் கண்டுகொண்டார்
நெடுநாளின் விளையாட்டை
நிறுத்த வேண்டும்

அரசினரும் பெரியநிலை
அடைந்தவரும் அறிந்திடுக
மக்கள் நெஞ்சில்

முரசிருந்து முழங்கிற்றுத்
தமிழ்வாழ்க தமிழ் வெல்க!
என்றே முன்னாள்

அரசிருந்த தமிழன்னை
ஆட்சியிலே சூழ்ச்சி செயும்
ஆட்கள் யாரும்

எரிசருகு! தமிழரிடை
எழுச்சியுறும் தமிழார்வம்
கொழுத்த தீ! தீ!!

கடவுள் வெறி சமயவெறி
கன்னல்நிகர் தமிழுக்கு
நோய் நோய் நோயே!

இடைவந்த சாதி எனும்
இடர்ஒழிந்தால் ஆள்பவள்நம்
தாய் தாய் தாயே!

கடல் போலும் எழுக! கடல்
முழக்கம்போல் கழறிடுக!
தமிழ் வாழ் கென்று!

கெடல் எங்கே தமிழின் நலம்?
அங்கெல்லாம் தலையிட்டுக்
கிளர்ச்சி செய்க!

விழிப்போரே நிலைக்காண்பார்!
விதைப்போரே அறுத்திடுவார்
களை காண்டோறும்

அழிப்போரே அறஞ்செய்வார்
அறிந்தோரே உயர்ந்திடுவார்!
ஆதல் ஆர்வம்

செழிப்போரே, இளைஞர்களே,
தென்னாட்டுச் சிங்கங்காள்!
எழுக நம் தாய்!

மொழிப்போரே வேண்டுவது
தொடக்கஞ் செய் வீர் வெல்வீர்
மொழிப்போர் வெல்க!


கவிஞர் : பாரதிதாசன்(19-Mar-11, 6:52 pm)
பார்வை : 75


மேலே