தமிழியக்கம் - பெருஞ்செல்வர்!

கோயில்பல கட்டுகின்றீர்
குளங்கள் பல வெட்டுகின்றீர்
கோடை நாளில்

வாயிலுற நீர்ப்பந்தல்
மாடுரிஞ்ச நெடுந்தறிகள்
வாய்ப்பச் செய்தீர்

தாயினும் பன் மடங்கான
அன்போடு மக்கள் நலம்
தாவு கின்றீர்

ஆயினும்நம் தமிழ்நாட்டில்
செய்யத்தக்க தின்னதென
அறிகி லீரே.

தமிழுயர்ந்தால் தமிழ்நாடு
தானுயரும் அறிவுயரும்
அறமும் ஓங்கும்

இமயமலை போலுயர்ந்த
ஒரு நாடும் தன்மொழியில்
தாழ்ந்தால் வீழும்

தமிழுக்குப் பொருள்கொடுங்கள்
தமிழறிஞர் கழகங்கள்
நிறுவி டுங்கள்.

தமிழ்ப்பள்ளி கல்லூரி
தமிழ்ஏடு பலப்பலவும்
நிலைப்பச் செய்வீர்!

நேர்மையின்றிப் பிறர்பொருளில்
தம்பெயரால் கல்லூரி
நிறுவிப் பெண்ணைச்

சிர்கெடுத்தும் மறைவழியாய்ச்
செல்வத்தை மிகவளைத்தும்
குடி கெடுத்தும்

பார் அறியத் தாம் அடைந்த
பழியனைத்தும் மறைவதற்குப்
பார்ப்பான் காலில்

வேர்அறுந்த நெடுமரம்போல்
வீழ்ந்தும் அவன் விட்டதுவே
வழியாம் என்றும்

அறத்துக்கு நிறுவியதை
வருவாய்க்கென் றாக்குவதில்
அறிவு பெற்ற

மறப்பார்ப்பான் செந்தமிழ்
மாணவரைக் கெடுத்தாலும்
எதற்குமே வாய்

திறக்காமல் தாமிருந்தும்
செந்தமிழ்க்குப் பாடுபடல்
போல் நடித்தும்

சிறப்பார்போல் இல்லாது
செந்தமிழ்க்கு மெய்யுளத்தால்
செல்வம் ஈக.

சிங்கங்கள் வாழ் காட்டில்
சிறுநரிநாய் குரங் கெண்கு
சிறுத்தை யாவும்

தங்கி நெடுங் கூச்சலிடும்
தன்மைபோல் தமிழ்நாட்டில்
தமிழே யன்றி

அங்கங்கே அவரவர்கள்
தம் மொழிக்கும், பிற மொழிக்கும்
ஆக்கம் தேடி

மங்காத செந்தமிழை
மங்கும் வகை செய்வதற்கு
வழக்கும் சொல்வார்


கவிஞர் : பாரதிதாசன்(19-Mar-11, 6:51 pm)
பார்வை : 79


மேலே