கைம்மைப் பழி

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு
வேரிற் பழுத்த பலா-மிகக்
கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்
வடிகின்ற வட்ட நிலா!
சீரற் றிருக்குதையோ குளிர் தென்றல்
சிறந்திடும் பூஞ் சோலை-சீ
சீஎன் றிகழ்ந்திடப் பட்டதண்ணே நறுஞ்
சீ தளப் பூ மாலை.

நாடப்படா தென்று நீக்கி வைத்தார்கள்
நலஞ்செய் நறுங் கனியைக்-கெட்ட
நஞ்சென்று சொல்லிவைத் தார் எழில் வீணை
நரம்புதரும் தொனியை
சூடப் படாதென்று சொல்லிவை த்தார் தலை
சூடத்தகும் க்ரீ டத்தை-நாம்
தொடவும் தகாதென்று சொன்னார் நறுந்தேன்
துவைந்திடும் பொற் குடத்தை!

இன்ப வருக்கமெல் லாம்நிறை வாகி
இருக்கின்ற பெண்கள் நிலை-இங்
கிவ்விதமாய் இருக்குதண்ணே! இதில்
யாருக்கும் வெட்க மிலை!
தன்கண வன்செத்து விட்டபின் மாது
தலையிற்கைம் மைஎன ஓர்-பெருந்
துன்பச் சுமைதனைத் தூக்கிவைத் தார்; பின்பு
துணைதேட வேண்டாம் என் றார்.

துணைவி இறந்தபின் வேறு துணைவியைத்
தேடுமோர் ஆடவன் போல்-பெண்ணும்
துணைவன் இறந்தபின் வேறு துணைதேடச்
சொல்லிவிடு வோம் புவி மேல்.
'கணை விடு பட்டதும் லட்சியம் தேடும்' நம்
காதலும் அவ் வாறே-அந்தக்
காதற் கணைதொடுக் காத உயிர்க்குலம்
எங்குண்டு சொல் வேறே?

காதல் இல்லாவிடம் சூனியமாம் புவி
காதலினால் நடக்கும்!-பெண்கள்
காதலுளத்தைத் தடுப்பது, வாழ்வைக்
கவிழ்க்கின்றதை நிகர்க்கும்.
காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்ட
கைம்மையைத் தூர்க்கா தீர்!-ஓரு
கட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச்
சாத்திரம் பார்க்கா தீர்!


கவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 5:04 pm)
பார்வை : 0


மேலே