பூவால் குருவி

நெஞ்சுக்குள் தொலையாதிருந்து
ஒரு சிற்றாறாய் ஊருகின்ற
என் முதல் காதல் பெட்டை
ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி.
பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில்
வன்னிக் கிராமத் தெருவொன்றில்
வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும்
பொன் சருகை கலையா முகமும்
இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய்
போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு
போட்டிச் சிறு நடையில்.
அது என்ன போட்டி.

காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய்.
அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய்.
என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில்
இன்று நீ அன்னை.

நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும்.
ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான்.
இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும்
குளக்கரையின் மான் குட்டி.

நானுமுன் நெஞ்சத்தில் சிற்றாறா.
இன்னும் காலில் விழுந்து கையேந்தி இரக்கின்ற
திருட்டுச் சிறு பயலா.
அஞ்சி அஞ்சி நாங்கள் அன்று
உடற் கடலில் கை நனைத்து கால் நனைத்து
நீந்த முயன்றதெல்லாம் எண்ணில்
மேனி இன்பத் துணுக்குறுதே.

எறிகுண்டாய் வானத்தியமன்
கூரை பிரித்துன் பின்வீட்டில் இறங்கிய நாள்
உன் முன்வீட்டுப் பிள்ளை தொலைந்தாளாம்.
பின் ஒருநாள் ஊர் காண
காக்கி உடையோடு வந்து காட்டோரம் பூப்பறித்து
கூந்தலிலே சூடி நடந்தாளாம்.
தெருவெல்லாம்
நீ உனது பூப்படைந்த பெண்ணின் காவலிலே
நிழலாய் திரிகிறியாம்.
இது பெருங்காவல்.
எல்லாம் அறிந்தேன்.

எங்கிருந்தோ வந்து
நம் தெருவோர மரக்கிளையில் குந்தி
தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த
அந்தக் குருவியைப் போல்
காணாமல் போனதடி காலங்கள்.


கவிஞர் : வ. ஐ. ச. ஜெயபாலன்(3-May-14, 4:08 pm)
பார்வை : 0


மேலே