மின்வெளி

திரைப்பரப்பை ஒளியூட்டி கடவுச்சொற்களை அனுப்பியதும்
மெல்லிய முனகலுடன் அவ்வுலகின் கதவுகள் திறந்து கொள்ளுகின்றன
தட்டையான உடலுடைய சிட்டுக்குருவிகள்
பறந்து பறந்து கொத்தித்தின்னும் தானியச்சொற்கள்
விளம்பரமாகின்றன


உடலை எப்பொழுதோ அவ்வெளியில்
மிதந்தலைய விட்டிருந்தேன்
நீள்வட்டப்பாதைகளில் இயங்கும் பால்வெளிக்கோளைப்போல
ஓயாத துடிப்புடன்
எந்தவொரு எரிநட்சத்திரத்தையும் தின்றுச் செரித்துவிடும்
வேட்கையுடன் மினுமினுப்புடன்


பசுமாட்டின் கனத்த முலைகளைப் போல
விரல்களால் காமம் கறப்பதற்காய் மட்டும்
தொழுவத்தில் தொங்கவில்லை
ஆண் பெண் இரு சுனைகளையும்
எனதேயாக்கி என் பிரக்ஞை சுடர்விட்டெரிய


மிதந்தலைகிறேன் ஒரு பால்வெளிக்கோளென


நீ வேவு நோக்கும் செயற்கைக் கோளின் காமராவில்
என் புகைப்படமோ என் பூங்குரலோ கூட
பதிவாவதேயில்லை. தனித்த கிரகம்.
என் உடலின் வேகம் கீறலை
உன் முகத்தழும்பாக்கிக் கடக்கும்


தானியச் சொற்களை மீண்டும் மீண்டும்
கொத்தியலையும் அசீரணச் சிட்டுக்குருவிகள் இருந்தனவே
அவற்றின் சிற்றுடலை காண நேர்ந்ததைப் போல
நீயெனைக் கண்டடைய முடியாது.
உன் முழுவாழ்விற்குமான
குற்றவுணர்வினாலும் மறதியினாலும்


பால்வெளியில் விண்கோள் என மிதந்து சுழல்கிறேன்.


இன்னொரு பிரபஞ்சத்தின் எரிகோள் நான்.
சுடர் பெருக எரிகிறேன்.
ஆழ்கடலுக்குள் குதித்த சூரியனை
இரவெல்லாம் மூச்சடக்கித் தேடாதே தேடாதே.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 5:31 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே