இரவின் சுடும் மூச்சு

ஆயிரம் தாமரைகள் அடுக்கிய யாக்கை
வன்மம் தவிர்த்தது எம் இனம்

நோயிலும் போயினும்
வல்லாங்கு ஆற்றுதல் உம் குணம்
யோனிகளைத் தம் குதிராக்கி
எம் ஆடவர் குறிகளறுத்து
தம் தேகம் பொருத்தியும் சேமித்தும்
அழகு பார்க்கும் உம் கண்ணாடிகள் தாம்
புரட்சியென்ற எச்சில்கள் குமிழிடும்
காலமென்ற நீர்மவெளிகள்

நகரங்களின் இரவைப்போல்
ஏக்கங்களால் கரடுதட்டிப்போன கல்குகைகள்
பதுக்கிய உமதுடல்கள்
சீழ்க்கைகளால் இரவைத் திறக்கும்
கிக்கோலோ நுழையும் வீடுகள் அவை

முதுமக்கள் தாழிகளில்
இரத்தக்கறை வரைந்த குகைஓவியங்களின்
காலப்பாறைகளில்
உறங்கி அடங்கும் எம் யோனிகளில்
உமது பொய்க்குறிகள் கீறிக்கசிந்த குருதியின் மூச்சு

என்றாலும் இரவும் நமது
இருளின் மீதூறும் நிலவும் நமது
உறவைப் பெருங்களிப்பாக்கும்
உயிர் மது சுரக்கும்
யோனியின் திண்மையும்
பூக்கும் விடுதலையும் மட்டும்
எமது எமது


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 7:06 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே