இல்லறம்

ஆற்றங்கரையில்
இன்னமும் தோற்றுப் போகாத மரம் நன்.
இன்று தெளிந்து போய்
புல்லும் சிலம்பாமல் நடக்கிறது காட்டாறு.
விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி
ஹோலிப் பண்டிகைக் குறும்போடு
வண்ணங்கள் வீசி
தொட்டு தொட்டுச் செல்கிறது அது
நேற்று வெறி கொண்டாடியது தானல்ல என்பதுபோல.
எனது கன்றுகள்
முளைத்தெழுகிற நாள்வரையேனும்
கைவிட்டகலும் வேர்மண் பற்றி
பிழைத்திருக்கிற போராட்டத்தில்
நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்
அது நானல்ல என்பது போல.
நேற்றைய துன்பமும் உண்மை.
நாளைய பயமோ அதனினும் உண்மை
எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு
சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள்
துள்ளி மகிழுதே பொன்மீன்கள்
நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே
இந்த நட்பும் வாழ்வும்.


கவிஞர் : வ. ஐ. ச. ஜெயபாலன்(3-May-14, 3:57 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே