தமிழ் கவிஞர்கள்
>>
ஞானக்கூத்தன்
>>
உள் உலகங்கள்
உள் உலகங்கள்
வயல்களைக் குளங்களென்று
நினைத்திடும் மீனும் நண்டும்
குசலங்கள் கேட்டுக் கொள்ளும்
கொய்கிற அரிவாளுக்குக்
களைவேறு கதிர்வேறில்லை
என்கிற அறிவை இன்னும்
வயல்களோ அடையவில்லை
மீனுடன் நண்டும் சேறும்
நாற்றிசைக் கரையும் பார்த்துக்
குளத்திலே இருப்பதாகத்
தண்ணீரும் சலனம் கொள்ளும்
பறைக்குடிப் பெண்கள் போல
வயல்களில் களைத்துத் தோன்றும்
பெருவிரல் அனைய பூக்கள்
மலர்த்தும் சஸ்பேனியாக்கள்
படுத்தவை கனவில் மூழ்கி
நிற்பவையாகி எங்கும்
எருமைகள். அவற்றின் மீது
பறவைகள் சவாரி செய்யும்
சரி
மனை திரும்பும் எருமைமேலே
எவ்விடம் திரும்பும் காக்கை?
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
