விழா

முத்து நிலாப்பொழியும் முற்றம் நெடுந்தொலைவில்
கத்துங் குயிலின் கனிப்பாடல்
குத்து
விளக்கெரியும் வண்ண விழாமேடை! ஆங்கே
உளக்கனியில் தேன்கொண்ட ஊர்!

வெள்ளி ஒளித் தூண்கள்! மேலே மணிக்கூரை!
கொள்ளை அழகு நிறைகோவில்!
உள்ளே
இருக்கை பசும்பொன்! எழில்சேர் இரவின்
திருக்கோலம் வேறு சிறப்பு!

தங்க நகையாள் தமிழ்க்கன்னி தேன்பாவை
பொங்க இருந்தாங்கே பூக்கின்றாள்!
திங்கள்
ஒளிநலமும் தென்றல் உணர்த்தும் நலமும்
களிக்கின்றாள்... ஓவியங் காண்!

நீல நெடுவானம் எங்கும் கொடிநிரைகள்!
கோலமொழி மகளின் கொண்டாட்டம்!
காலமுனி!
ஆங்கு விழாக் காணும் ஐயன் இதழ்முறுவல்
தாங்கும் அழகோ தனி!

மரகதம்சேர் வண்ண முடிசுமந்து மக்கள்
திரளிடையே வாழ்கின்றாள் தேவி!
கரமிசை
செங்கோல் சுமந்து சிரிக்கின்றாள்... ஞாலத்தே
பொங்கும் மகிழ்ச்சிப் புனல்!

பவள இதழ்கள் பளபளக்கும்....! ஆசை
தவழ ஒரு முறுவல் தாவும்!
இவளேன்
விழியாலே என்னை வெறிக்கப் பார்க் கின்றாள்?
அழியாத காதல் அழகு!

கோமே தகத்தின் குளிர்ந்த ஒளிகொண்டாள்!
நாமீதி லாடும்எழில் நங்கை!
பூமூடும்
தேனாகி நிற்கின்ற தேவி அருந்தமிழே
நானாகி நிற்கின்றேன் நான்!

வைர நெடும்போர் ஆடி உடல்வளைந்து
மையின் தலைநரைத்த மானிடன்
செய்ய தமிழ்ப்
பாவலன் பெற்ற பசுங்காதல் ஓவியமே!
தேமொழியே வாழ்க திகழ்ந்து!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:26 pm)
பார்வை : 25


மேலே