பயணங்கள்

எதிர்வருவோர் மோதிவிடாமல்
வளைந்து நெளிந்து
நிதானமாக
மிகக் கவனமாக
நடைபாதையில் அவன் பயணம்.

தார் தகிக்கும் சாலையில்
எதிரெதிர் திசைகளில்
வாகனங்களின் அசுரப் பாய்ச்சல் கண்டு
ஒருகண மனப் பதற்றம்.
கிறீச்சிட்டு நின்ற
வாகனங்கள் நடுவே
செந்நிறச் சதைக்குவியலாய் அவன்.

விசிலூதி விரைந்த காவலர்
சிதைந்த கபாலத்தின் மீது
கைத்தடியால் தட்ட
பதற்றத்துடன் எழுந்தவன்
சிதைவுகளைச் சேகரித்துக்கொண்டு
விரைந்தான் நடைபாதை நோக்கி.

பதற்றம் தணிந்து
நிதானமாக
மீண்டும்
நடைபாதையில் அவன் பயணம்


கவிஞர் : ராஜமார்த்தாண்டன்(2-Nov-11, 4:02 pm)
பார்வை : 100


மேலே