ஆடுகின்றாள்

கொலையுலகம் கோண லுலகமிகத் தாழ்ந்த
புலையுலகம் போக்கினேன். போக்கிக் -- கலையுலகம்
சென்றேன்; மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள்
நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு,

விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின்
வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும் -- கழிந்தோடிக்
கைம்மலரில் மொய்க்கும்! அவள் நாட்டியத்துக் கண்கள்என்
மொய்ம்மலரில் பூரிப்பின் வித்து.

சதங்கைகொஞ்சும் பாதம் சதிமிதிக்கும், வானில்
மிதக்கும் அவள் தாமரைக்கை. மேலும் -- வதங்கலிலாச்
சண்பகத்து நல்லரும்பு சாடைபுரி கின்றவிரல்
கண்கவரும் செம்பவளக் காம்பு.

செந்தமிழை நல்லிசையைத் தேன்மழையை வானுக்குத்
தந்தோம்என் னும்தாள மத்தளங்கள் -- பந்தியாய்
இன்னஇடம் இன்னபொருள் என்றுணர்த்தும் அன்னவளின்
வண்ண இடை வஞ்சிக்கொடி.

கோவை உதட்டை ஒளிதழுவும், அவ்வொளியில்
பாவைதன் உள்ளத்தில் பாங்கிருக்கும் -- தாவும் அதைக்
கண்ணாற் பதஞ்செய்து கையோடு நற்கலையைப்
பண்ணால் உயிரில்வைத்தாள் பார்.

இளமை, அழகு, சுவைகொள் இசை, என்னும்
களமெழுந்த நாட்டியத்தைக் கண்டேன் -- உளமார
நானெந்தத் துன்பமுமே நண்ணுகிலேன் பாய்ந்துவரும்
ஆனந்தத்தின் வசமானேன்.


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 4:51 pm)
பார்வை : 24


மேலே