வழிப்போக்கன்

உங்கள் பூக்களை
வண்டுகளுக்கு முன்பே
வாசித்தவர் எங்கே சோலைகளே

தேயிலைக் கொழுந்து
கிள்ளியவன் சந்ததி
தேயிலைக்க் கொழுந்தாய்க்
கிள்ளப்பட்டதோ?

இன்னும்
மேகம் பாடும் மெல்லிசையாய்ப்
பொழியத்தான் பொழிகிறது மழை

நனையத்தான் ஆளில்லை

இன்னும்
கிளைகள் மீது
வசந்தம் போடும் கையெழுத்தாய்ப்
பூக்கத்தான் பூக்கின்றன் மலர்கள்

பறிக்கத்தான் ஆளில்லை.

எங்கே?

இந்த மண்ணின்
பூர்வீக புத்திரர்கள் எங்கே?

சொந்த தேசத்தில்
உயிர்களைப் புதைத்துவிட்டு
தூர தேசங்களில்...
உடல்கள் உடல்கள்

வெறும் உடல்கள்

ஈழத்தோழா

உந்தையும் தாயும்
மகிழ்ந்து குலாவி
இருந்தும் இந்நாடே

இன்று

தந்தையின் எதிரே
தாயின் துகிலை
உரிந்ததும் இந்நாடே

காதலியோடு
கைவிரல் கோத்துக்
கலந்ததும் இந்நாடே

இன்று

காதலன்
சிறைக்குள்
காதலி தரைக்குள்
முடிந்ததும் இந்நாடே

இந்த ரத்தப் பெருக்கின்
நதிமூலம் எது?

முதலில் வெடித்தது
எவர் துப்பாக்கி?

முதலில் விழுந்தது
எவரின் பிணம்?

இந்த ஆராய்ச்சிகளைச்
சோதனைக் கூடத்திற்கு
அனுப்பி விடுங்கள்

இப்போது தேவை
காயத்திற்கு மருந்து

இப்போது தேவை
தாகத்திற்கு நீர்

இப்போது தேவை
என் தோழர்களுக்கெல்லாம்
தோள்

இப்போது தேவை
இந்த
வழிப்போக்கன் வார்த்தைக்கு
மரியாதை


கவிஞர் : வைரமுத்து(3-Feb-12, 4:50 pm)
பார்வை : 61


பிரபல கவிஞர்கள்

மேலே