அம்மா அறியாத இந்தச் சொல்....
அம்மாவின் அகராதியில்...
அவள் காதல் என்ற சொல்லை
அறிந்திருப்பாளா?...
என்பதற்கு எனக்குக் குறிப்புகளேதுமில்லை.
அவளுடைய உலகத்தில்...
"காதல்" என்னும் சொல்
இன்று வரை...
பிறந்திருக்காத ஒரு சொல்லாயிருக்கலாம்.
அல்லது...நாம் இன்னமும் கட்டி அழும்
ஒரு தீண்டாமைச் சொல்லாய் இருக்கலாம்.
பதின் பருவம் ...முதிர்வுறும் முன்னே
வேறு கூட்டுக்குள் நுழைந்துவிட்டவளுக்கு...
அவசியமற்றதாகி இருக்கலாம் அந்தச் சொல்.
வேறு..வேறு சுமைகள்....
அவள் தங்கிய கூண்டு ஒன்றின்
கம்பிகளாகிவிட...
அவள் வானத்திற்கு அப்பால் விழுந்திருக்கலாம்
அந்தச் சொல்.
பசிக்கான நெல்மணி விழும் இடமாய்
கூண்டு மாறிவிட...
பறவையாய் இருந்த காலம் மறந்து போன
அம்மாவின் சிறகுகளிலிருந்து
கழன்று விழுந்திருக்கலாம் அந்தச் சொல்.
என்றாலும்...
எனக்குச் சிறகுகள் முளைக்கும்
இந்தப் பருவத்தில்...
எனக்குள் வானம் பரப்பி வரும்
இந்தச் சொல்லை....
அன்புக்கு அன்னியமில்லை
இந்தச் சொல்...
என எப்படி நிரப்புவேன் நான்?...
என் அம்மாவின் கூண்டுச் சிறகுகளில்.