மதிப்பு
அனைத்து தோழமைக்கும் என் வணக்கம்.
நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் கண்டு மனது மிகவும் வேதனைப்படுகிறது. அனைவரும் ஒற்றுமையாக நட்புடன் இருக்கவே நான் விரும்புகிறேன். ஆனால் இங்கு பிரிவினைகள், சண்டைகள் என்று இத்தளம் போர்க்களம் ஆகிக் கொண்டிருக்கிறது. இத்தளத்திலிருந்து எவர் ஒருவர் விலகுவதாகக் கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ள மனம் சங்கடப் படுகிறது. இங்கு யாரும் யாரையும் குறைத்து மதிப்பிடமுடியாது. அனைவருமே திறமை வாய்ந்தவர்கள்தான். ஒருவரை ஒருவர் இழிவுபடுத்திக் கூறி நாம் அவர்களை தாழ்த்தி விட்டோம் என்று அவரவர் நினைத்துக் கொள்கின்றனர். யாரும் யாரையும் குற்றம் கூறி மதிப்பினை குறைத்துவிட முடியாது. இதோ தள நண்பர்களுக்காக ஒரு சிறு கதை. மனிதனின் மதிப்பு பற்றியது.
உடல்நிலை சரியில்லாதபோதும் சிறிது சிரமம் எடுத்து இந்த ஆங்கில கதையை மொழி மாற்றம் செய்திருக்கிறேன்.
நண்பர் திரு பெனி அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள். இத்தளத்தை விட்டு விலக வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மதிப்பு
======
நன்கு அறியப்பட்ட பேச்சாளர் ஒருவர் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை மேலே தூக்கிப் பிடித்தபடி, கருத்தரங்கில் தன் பேச்சைத் துவங்கினார். அந்த அறையில் 200 பேர்கள் குழுமியிருந்தனர்.
"யாருக்கு இந்த ஆயிரம் ரூபாய் நோட்டு பிடித்திருக்கிறது?"
தம் கைகளில் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை தூக்கிப் பிடித்தபடி கேட்டார் அந்த பேச்சாளர்.
கருத்தரங்கில் குழுமியிருந்த அனைவரின் கைகளும் மேல் நோக்கி எழ ஆரம்பித்தது.
"உங்களில் ஒருவருக்கு நான் இந்த ஆயிரம் ரூபாய் நோட்டினை அளிக்கப் போகிறேன். அதற்கு முன்பாக நான் இதை செய்யப் போகிறேன்."
என்று கூறி அந்த ஆயிரம் ரூபாய் நோட்டினை நன்றாக கசக்கி அதனை மீண்டும் உயர்த்திப் பிடித்து பிறகு கேட்டார்
"இன்னும் இது யாருக்கு வேண்டும்"
இப்பொழுதும் அனைவரின் கைகளும் காற்றில் தூக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது.
"நன்று"
என்று அவர் பதிலுரைத்தார். அவர் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டினை இம்முறை தரையில் போட்டுவிட்டு தன் செருப்பு காலால் நன்கு மிதித்தார்.
இப்பொழுது அந்த ரூபாய் நோட்டு கசங்கி போனதோடு மட்டுமல்லாது அழுக்கு படிந்ததாகவும் காட்சி அளித்தது. அதனை எடுத்து மீண்டும் மேலே தூக்கி பிடித்து அனைவரையும் நோக்கி கேட்டார்.
"இப்பொழுது இது இன்னும் யாருக்குத் தேவைப்படுகிறது?"
இப்பொழுதும் அனைவரின் கரங்களும் மேல் நோக்கியே உயர்ந்தபடி இருந்தது.
" என்னுடைய நண்பர்களே, நீங்கள் அனைவரும் மிகவும் மதிப்புள்ள பாடம் கற்றுக் கொண்டீர்கள். உங்கள் அனைவருக்கும் இன்னும் இந்த ஆயிரம் ரூபாய் நோட்டு தேவை உடையதாக இருக்கிறது. ஏனென்றால் இதனுடைய மதிப்பு இன்னும் குறையவில்லை.
பல தருணங்களில் நாம் நம் வாழ்க்கையில் தவறி விழுகிறோம், நசுக்கப் படுகிறோம். நம் வாழ்க்கைப் பாதையில் நடைபெறும் சூழல்களுக்கேற்ப நாம் எடுக்கும் முடிவுகளால் நம் மீது அழுக்கு / கறை படிய நேரிடும். .
நாம் நினைத்துக் கொள்வோம். நாம் எதற்கும் மதிப்பற்றவர்கள் / பயனற்றவர்கள் என்று. என்ன நடந்தது என்பதோ அல்லது என்ன நடக்கப் போகிறதோ என்பதோ ஒரு விஷயம் அல்ல / பொருட்டல்ல. உங்களுடைய மதிப்பை நீங்கள் எப்பொழுதும் இழப்பதில்லை.
நீங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எத்தருணத்திலும் உங்களுடைய மதிப்பை இழக்காதவர்கள். இதனை நீங்கள் ஒருபொழுதும் மறக்கக் கூடாது. "
இதனை அப்பேச்சாளர் கூறி முடித்தவுடன் மகிழ்ச்சிப் பெருக்குடன் அந்த கூட்டம் கலைந்தது.
(நான் படித்த அந்த கதையில் 20 டாலர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை மட்டும் மாற்றி இங்கே ஆயிரம் ருபாய் என்று குறிப்பிட்டிருக்கிறேன். )
இக்கதையில் குறிப்பிட்டுள்ள விஷயம் அனைவருக்கும் புரியும் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
சொ. சாந்தி.