இந்த பதிவு கூட அந்த பெண்ணிற்க்காகத் தான்.....
நான்கு வருடங்களுக்கு முன்னாள் அவினாசி, கோவை தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் பக்கத்தில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஒருவர் என்னை பார்த்துக் கொண்டே தான் செத்துப் போனார். அவருக்கு எப்படியும் ஒரு முப்பத்தைந்தில் இருந்து நாற்பது வயது இருக்கும்.அவர் யாரை நினைத்துக் கொண்டு இறந்து போனார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அவர் யாரோ ஒருவரை இந்த உலகத்தில் தனியாக விட்டு விட்டு போய்விட்டார் என்பது மட்டும் அவர் கண்களில் தெரிந்தது. அவர் உயிருக்காக போராடிய போது நான்கு ஐந்து பேர் தான் இருந்தோம். பிணமாக கிடந்த போது முப்பது பேருக்கும் மேலாக நின்று கொண்டிருந்தோம். அந்த வழியாக வாகனங்களில் வந்த சிலர் மட்டும் வாகனத்தை நிறுத்தி "என்ன ஆச்சு" என கேட்டு தெரிந்து கொண்டு கிளம்பிவிட்டார்கள். சிலர் "ஆள் அவுட்டா" என தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள். ஒரு "மூன்றாவது" மனிதர் இறந்து போனவரின் செல் போனில் இருந்த நம்பர் எல்லாத்துக்கும் தகவலை தெரியபடுத்தி கொண்டிருந்தார். எல்லாருமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் தான். சிறிது நேரத்தில் போலிஸ் வந்தது, விபத்தைப் பற்றியும், அவர் இறந்து போனதை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்கள். எல்லா தகவல்களையும் வாங்கி கொண்டு " இங்க யாரும் நிக்காதிங்க, டேய் போங்கடா" என்று விரட்டினார்கள். ஆம்புலன்ஸ் வருவதற்கும், இறந்து போனவர் யாரையெல்லாம் விட்டு போனாரோ அவர்களில் இரண்டு மூன்று பேர் வருவதற்கும் சரியாக இருந்தது. இறந்து போனவர் யாரை தன்னந் தனியாக விட்டு விட்டு போயிருப்பார் என நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ, அவர் அந்த பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். இப்படியும் ஒரு அழுகை, கதறல் உலகத்தில் இருக்கிறது என நான் கண் கூடாக பார்த்த நாள் அது தான். இன்று வரை அப்படி ஒரு அழுகையை வேறெங்கும் நான் பார்த்தது இல்லை.அந்த பெண்ணிற்கு ஆறுதல் சொல்லக் கூடியவர் இறந்து போனவராகத் தான் இருக்க வேண்டும். என்னுடைய கண்களில் வந்து நின்றது அந்த பெண் அழுத அழுகை. இறந்த காலம், எதிர் காலம் என எதை பற்றியும் சிந்திக்காமல் நிகழ் காலத்தில் எந்த மனிதராலும் அப்படி ஒரு அழுகையை இந்த பூமிக்கு தந்து விட முடியாது. பல பேருடைய கண்ணீர், சோகம், கோபம், வேடிக்கை எல்லாவற்றையும் ஒரு சேர வாங்கி வைத்துக் கொண்டார்கள் அந்த பெண்ணும், இறந்து போன அந்த உடலும். வந்து நின்ற ஆம்புலன்ஸ் உடலை வாங்கி கொண்டும், மற்றவர்களை ஏற்றிக் கொண்டும் எங்கோ சென்று கொண்டிருந்தது. இப்போது என் கவலையெல்லாம் அந்த பெண்ணை நம்பி இருப்பவர்களை பற்றித் தான்......
இந்த பதிவு கூட அந்த பெண்ணிற்க்காகத் தான்.....
(எவ்வளவு வேகமா வேணும்னாலும் போங்க, ஆனா போகக் கூடாத இடத்துக்கு போய்டாதிங்க, அப்படிப்பட்ட பெண் எங்கள் வீட்டிலும் இருக்கலாம், உங்கள் குடும்பத்திலும் இருக்கலாம்.....)