சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் - அறிமுகம்
கிள்ளிவளவன் சோழவேந்தருள் சிறப்புடையவன் ஆவான். சிலர், கிள்ளிவளவன் என்று அழைக்கப் பட்டவனும், குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவனும் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்கள் என்று கருதுகின்றனர். இருப்பினும், வேறு பல வரலாற்று ஆசிரியர்கள் கிள்ளி வளவனும் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனும் ஒருவனே என்று ஆதாரங்களுடன் கூறுகின்றனர். அவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்றும் அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
கிள்ளிவளவன் வீரத்திலும் வெற்றியிலும் கொடையிலும் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமையுடைய வனாகவும் இருந்தான் என்பது இவன் இயற்றிய தாகப் புறநானூற்றில் உள்ள ஒரு பாடலிலிருந்து (பாடல் 173) தெரிகிறது. இவன் காலம் கி.பி.இரண் டாம் நூற்றாண்டின் இறுதியாகவும், மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கமாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சோழன் கரிகால் பெருவளத்தானின் இளைய மகனான வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி கரிகாலன் இறந்த பிறகு பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். வேற்பஃறடக் கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர்.
இவர்களில், நலங்கிள்ளியும் கிள்ளிவளவனும் பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டதாகத் தெரிகிறது. நலங்கிள்ளிக்குப் பிறகு கிள்ளிவளவன் ஆட்சி புரிந்தான் என்றும் கருதப்படுகிறது. மற்றும், கிள்ளிவளவன் காலத்தில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதி கடலால் கொள்ளப்பட்டதாக மணி மேகலையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கிள்ளிவளவன் ஒரு சமயம் கருவூரை முற்றுகையிட்ட போது, அடைபட்ட வேந்தன் போர்க்கு வராது அஞ்சியிருக்க, ஆலத்தூர் கிழார், ‘அஞ்சிய வேந்தன் அடைபட்டுக் கிடக்க அவனோடு பொருதல் உன் பெருமைக்குப் பொருந்தாது’ எனச் சொல்லிப் பாடினார். பின்னர் அதைக் கைப்பற்றியது அவனுடைய மிகச் சிறந்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
சேரனை வென்ற பிறகு, மலையமான் திருமுடிக் காரியுடன் போரிட்டு அவனைக் கிள்ளிவளவன் வென்றான். இவன் பெரும் சினம் கொண்டு, மலையமான் மக்களைப் பற்றிக் கொணர்ந்து யானையின் காலிடற ஆணையிட, அதனை அறிந்த கோவூர் கிழார் சோழன் குடிப் பெருமையும், இளஞ்சிறாரின் இயல்பும் கூறி அவன் செயலைத் தடுத்து மக்களை உய்வித்தார்.
பின்னர், பாண்டிய நாட்டின் மீது கிள்ளிவளவன் படையெடுத்தபோது, பாண்டியரின் படைத் தலைவன் பழையன்மாறன் என்பவனிடம் தோல்வியுற்று கிள்ளிவளவன் இறந்ததாகக் கருதப்படுகிறது. இவன் இறந்த இடம் குளமுற்றம் என்னும் ஊர் என்பதால் இவனை குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப் பிற்காலச் சான்றோர்கள் குறிக்கின்றனர்.