சாலைக் கிளுவைகள்

என் பூவரசின் வாசங்களால்

நாசிகள் நிரப்பப்பட்ட

சாலையோரத்தின்

கிளுவைக் கதிகால்கள் எல்லாம்

என் முகத்திற்கு தினம்

சவர அலகாய் எரிச்சலைத் தடவி ஏகாந்தம்

ஓதுகின்றன

நான் அந்த சாலை ஓரங்களைக்

கடந்து செல்லும்

போதெல்லாம்



நீயும் நானும் ஒவ்வொரு அந்தியும்

வார்த்தைப்

பரிமாற்றங்களுக்காய்

வளைந்த கிளுவை வேலிகளின் சாரல்களில்

ஒதுங்கிய பொழுதுகளில்

என் உதடுகள்

சிந்திய

வார்த்தைகளை

முள் வேலிகள் கீறிக் கிழித்ததனால்

உன் உதடுகள் கசிந்திட

எண்ணிய மௌனங்களை

பூவரச மொட்டுக்கள் நுகர்ந்து

கொண்டதாலும்

இருவரும் மௌனச் சந்தியில்

சிந்திக்கத் தொடங்கியதும்

அந்திப் பொழுதுகளுக்குச் சலிப்புத் தட்டியதால்

உன் வளைக் கரங்கள்

பிடுங்கிக்

குவித்து விட்டிருந்த

கிளுவை இலைகளின் தளும்புகளில்

இன்னமும் நீர் வடிந்து

கொண்டிருப்பதை எண்ணி.

எழுதியவர் : முல்லைகேசன் (30-Aug-13, 12:39 pm)
சேர்த்தது : முல்லைக்கேசன்
பார்வை : 70

மேலே