மண்ணில் பிறந்த அதிசயமே

அன்புவடிவானவரே! அகிம்சையின் காவலரே!
உங்களின் பிறப்பு எங்களின் சிறப்பு!
உண்மைக்கு உன்பெயர் பொதுமையா!
நேர்மைக்கு உன்சொல் போதுமையா!
சத்தியத்தை உருவமாக்கி சாந்தத்தை உள்ளமாக்கி
அன்பை மனமாக்கி அற்புதமாய் திகழ்ந்தாய்!
நீதியை குரலாக்கி நம்பிக்கையை கரமாக்கி
நேர்மையை வழியாக்கி நேசப்போர் புரிந்தாய்!
நீர் எங்கிருந்தாலும் நிம்மதி அங்கிருக்கும்
நீர் எதுசெய்தாலும் நல்லதே நிறைந்திருக்கும்!
நீர்தான் எங்கள் கடைசிக் காவலரோ?
நீர்தான் எங்கள் இறுதி மீட்பரோ?
அன்பு தன்னைதானே புதுப்பித்திக்கொண்டதோ
அகிம்சை தன்னைதானே பிறப்பித்துக்கொண்டதோ
உம்மை பார்த்துப்பார்த்து உலகத்தார் வியந்திடவே
உண்மை புண்ணியராக உலவிக்கொண்டிருந்தாய்!
உத்தமரே! சத்தியமே! உம்மைக் கொன்று
கொள்ளிவைத்தோம் உண்மைக்கும் நேர்மைக்கும்!
அறமே! கண்ணியமே! அன்பை விற்று
விலைபேசினோம் அகிம்சைக்கும் நிம்மதிக்கும்!
அழுதழுது வீழ்ந்தோம் கதறிகதறி சோர்ந்தோம்
துடிதுடித்து சாய்ந்தோம் துயரத்தில் மூழ்கினோம்!
அன்பைக் கொன்று பண்பற்றுத் திரிகிறோம்!
அகிம்சையை வீழ்த்தி ஆதரவற்று அலைகிறோம்!
உங்களின் நேசம் உங்களின் தேசம்
எங்களின் கரங்களால் படும்பாடு பார்த்தீரோ?
எங்களின் நிலையும் எங்களின் வாழ்வும்
தங்களின் வசப்பட மீண்டும் பிறப்பீரோ?
அன்பே! அறிவே! எங்களுக்குள் வந்திடுங்கள்!
பாசமும் பண்பும் எங்களிடம் தந்திடுங்கள்!
கனிவே! கருணையே! எங்களுக்குள் இருந்திடுங்கள்!
நிம்மதியும் நன்மையும் எங்களிடம் வளர்த்திடுங்கள்!
மான்பே! மேதமையே! எங்களோடு இணைந்திடுங்கள்!
நேர்மையையும் நீதியையும் எங்களுக்குள் பதித்திடுங்கள்!
அகிம்சையே! அறவனைப்பே! எங்களை திருத்திடுங்கள்!
குணத்திலும் கொள்கையிலும் எங்களை உயர்த்திடுங்கள்!
செழுமையே! சிறப்பே! எங்களோடு சேர்ந்திடுங்கள்!
இன்பமும் உயர்வும் எங்களுக்கு தந்திடுங்கள்!
அற்புதமே! அதிசயமே! எங்களை வாழ்திடுங்கள்!
ஆனந்தமும் ஆற்றலும் எங்களுக்கு அருளுங்கள்!