கவிதைக் கன்னிப் பரிசு பாடுமனமே
நெஞ்சைக் கருவொன் றீர்க்கிறது
நினைவில் நாளாய்ப் பூக்கிறது
பஞ்சும் இரும்பா யாகிறது
பருவம் எய்த நோகிறது.
துடித்தேன் நெஞ்சைத் திறப்பதற்குத்
துள்ளித் திரியப் பறப்பதற்கு
வெடித்தே விடும்போல் இருக்கிறது
வென்றாள் சூழல் சிரிக்கிறது.
வந்தாள் கண்டாள் வரச்சொன்னாள்
மயங்கிக் கன்னந்த தரச்சொன்னேன்
தந்தாள் தழுவிப் படர்கின்றாள்
சரிவா என்றாள் தொடர்கின்றேன்.
காலை மாலை கலையூறும்
சோலைக் கோல மலையேறிப்
பாலைத் தேனை வார்க்கின்றாள்
பழச்சா றமிழ்தில் ஆர்க்கின்றேன்!
கட்டாய்க் கட்டாய் அவிழ்க்கின்றாள்
கதைகள் கண்ணாற் குவிக்கின்றாள்
சிட்டாய் ஆடிச் சிரிக்கின்றாள்
செழிக்கும அழகை விரிக்கின்றாள்!
அடடா! அடடா! வெளியேறி
அடியோ டென்னை மறக்கின்றேன்
கடலா நிலமா வளிதீயா
கனவா நினைவா தெளிவெய்தி -
பெற்ற கவியைப் படிக்கின்றேன்
பெயரைப் பெறநான் துடிக்கின்றேன்
கற்றோர் கையில் தருகின்றேன்
கவிதைக் கன்னிப் பரிசென்றே!