நர்மதையின் சிரிப்பு
இலைகள் உதிர்ந்து
விழுந்துகொண்டிருந்தும்
நீரின் விளிம்புகள்
சலனமின்றிப் படுத்துக்கிடக்கின்றன.
வனப் பறவைகள்
குழப்பத்தோடு
நீரில் தேடிக்கொண்டிருக்கின்றன
தமது பிம்பங்களை.
எவ்வளவு முயன்றும்
நீரால் அழிக்க முடியவில்லை
வனதேவதைகளின்
சூலங்களின் மேல்
எங்கள் இறுதிப் பிரார்த்தனையின்
குங்குமத்தையும் மஞ்சளையும்.
சுவர்களில் ஈரம் கூடக் கூடப்
பல்லிகள் கதறுகின்றன.
பறவைகளுக்குச் சகுனங்கள்
புரியப்போவதில்லை.
ஏளனமாய்ச் சிரிக்கும் நர்மதையே
சொல்லிவிடு அவற்றுக்கு
புனரமைப்பும் மறுவாழ்வும்
வென்றுவிட்டதை.