கோடையில் விழுந்த காலம்

நக்ஷத்திரங்கள் மின்னும் இரவில்

குருதி நிறைந்த
நிலம் தாண்டிச் செல்கிறது
என் காலம்.

இடிக்கப்பட்ட கட்டிடங்கள்...
வதைக்கூடங்கள்...
பெண்மைகளின் கசந்த பார்வை...

எல்லாம் கடந்து செல்கிறது...
களைத்து விழுந்த என் காலம்.

வெயில் உறைந்த பகல்...
கோடையின் சுழல்...
திசையற்ற நிலவின்
நகரும் இரவுகள்..

என...
எல்லாக் காலங்களிலும் எஞ்சியிருந்தது
வலி நிறைந்த துயரத்தின் கொடும் நிழல்.

இரத்த வாடை நிரம்பிய மண்...
துக்கத்தின் சாம்பல்...
அமிலக் கண்ணீர்...
பிழைத்ததாய்த் திரியும் அகதி உயிர்கள்...

என..
உன்மத்தம் பிடித்துத் தளர்ந்திருந்தது நிலம்.

நான்...
அறிந்தே வஞ்சித்த உறவுகளிடம்...
மன்னிப்பைக் கோரிக் கடந்து செல்கிறேன்.

எதுவும் மிச்சமில்லை...

என..
சிதைந்தும்...
குமைந்தும் சொல்கிறது....

ஷெல்களால் சிதைந்த
ஒரு வீடு.

எழுதியவர் : rameshalam (8-Jan-14, 6:56 pm)
பார்வை : 74

மேலே