கடவுள் வாழ்த்து - சிறுபஞ்ச மூலம் - - நேரிசை வெண்பா
கடவுள் வாழ்த்து - நேரிசை வெண்பா
முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி யாற்றப் பணிந்து - முழுதேத்தி
மண்பாய ஞாலத்து மாந்தர்க் குறுதியா
வெண்பா வுரைப்பன் சில!
பொருளுரை:
எல்லாவற்றையும் அறிந்து, காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் நீக்கி மூப்பில்லாதவனாகிய கடவுளின் திருவடிகளை குற்றம் இல்லாமல் மிகுதியாக வணங்கி (அவனுடைய மங்கள குணங்கள்) முழுவதும் போற்றி மண்ணானது பரவியிருக்கின்ற இப்பூமியிலுள்ள மக்கட்கு நன்மை யுண்டாகுமாறு சில வெண்பாச் செய்யுட்களால் ஆகிய சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூலை யான் சொல்வேன்!
கருத்துரை: நிலைபெற்ற கடவுளின் அடிகளை வணங்கிப் போற்றி இந்நிலவுலகினர்க்கு நன்மை யுண்டாகுமாறு இந்நூலை யான் கூறுவேன்.
இச்செய்யுளில் கடவுள் வணக்கமும் செயப்படு பொருளும் உரைக்கப்படுகின்றன வாதலின், இது சிறப்புப்பாயிரம் எனப்படும். ஆசிரியர், தாம் எடுத்துக் கொண்ட நூல் இடையூரின்றி இனிது முடிதற் பொருட்டு ஆன்றோர் முறைப்படி இக் கடவுள் வாழ்த்துக் கூறினர்.