மந்திரக் கோலும் மாயாவியும்

மந்திரக் கோலுடன்
என் முன்னே நின்றான்
ஒரு மாயாவி.

வாஞ்சையுடன்
வரம் வேண்டுமா என்று கேட்டான்.

குழம்பிய மனதுடன்
ஆம் என்றேன்.

ஜாதிகளை ஒழிக்கவா?
சமசீர் பொருளாதாரம் படைக்கவா?
சகிப்புத் தன்மையை மேலும் கூட்டவா?
ஒன்றுதான் வரமாகக் கிடைக்கும்
மாற்றுக் கேள்வி கேட்டால்
மறைந்திடுவேன் உடனே
என்றான் மாயாவி.

சகிப்புத் தன்மையால்
விளைந்ததுதானே
இந்த அடிமை வாழ்க்கை
வேண்டாம் அந்த வரம்.

சமசீர் பொருளாதரமெனில்
என்றிலிருந்து அமுலாகும்
எனக்கான வரம்.
பண முதலைகளின் சேமிப்பு
பங்கீட்டிற்கு வருமாவென்பதில்
குழப்பமான சந்தேகம்
ஆதலாம் அதுவும் வேண்டாம்.

கடைசியாக
ஜாதியை ஒழித்து விடு என்றேன்
முழு மனதுடன்.

என் ஜாதியையா அல்லது
உன் ஜாதியையாவென்று
கேட்ட மாயாவி
மந்திரக் கோலால்
நட்ச்சத்திரங்களை
கண் முன் தூவியபடி
மறைந்து போனான்.

எழுதியவர் : பிரேம பிரபா (9-Jan-14, 10:00 am)
சேர்த்தது : பிரேம பிரபா
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே