கல்லணைக்கோர் பயணம்23

கல்லணைக்கோர் பயணம்..23
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )

நண்பகல் வேலையில்
நண்பர்கள் பேச்சினில்
கலகலப்பும் விறுவிறுப்பும்
களைப்பினை களைந்தன
சாலையோர செடிகளின்
தலைகளை கோதியவாறே
தொடர்ந்தது பயணம்
எருக்கம்பூவின் மொட்டுகளை
ஒவ்வொருவராய் உடைத்தோம்
எழுதிய தேர்வின்
வெற்றியை அறிய
மாற்றி மாற்றி ..
வெற்றியும் தோல்வியும்
மாறிமாறி வந்தது
மொத்தத்தில் அனைத்து
மொட்டுகளும் தோல்வியுற்றன
மலராகும் பரிட்சையில்..

மலர்ந்த பூக்களையும்
விடவில்லை நாங்கள்
மலரின் இதழை தவிர்த்து
மூக்குத்திப்போன்ற பகுதிகளை
மெல்ல கிள்ளி
மூக்கில் அணிந்தோம்
வண்டிற்க்குப் போட்டியாய்
தேன் சேகரித்து
சுவைத்து மகிழ்ந்தோம்
காய்ந்த காயின்
பஞ்சை பறக்கவிடுவதும்
இலைகளை பறித்து
அதில் வடியும்
பாலை ஆய்விடுவதும்
வாயில்லா செடிகளை
உயிருடன் வதைத்தது
இயற்கையின் ஆராய்சியாய்
தொடர்ந்தது அந்நாட்களில்

அமைதிக்கான ஊர்வலம்
அழகாய் செல்லும்
வாய்க்காலின் நீரில்
உடைந்த ஓடுகளை
ஒவ்வொன்றாய் தாவவிட்டு
அதிக தாவல்கள்
யாருடைய கல்..!
போட்டியும் நடந்தது
விறுவிறுப்பாய் சிலநிமிடம்
கல்லால் அடித்தாலும்
கவலைப்படாமல் மெல்ல
கல்லையும் விழுங்கி
மூச்சை மட்டும்
வெளியில் அனுப்பின
நீர் குமிழ்களாய்..

வாய்க்காலை ஒட்டி
தண்ணீர் தண்டுச்செடி
வெண்பூக்களை தலையில்
அழகாய் சூடியிருக்க
பறிக்க மனம் வரவில்லை
முதன் முதலாய்..
சிலேட்டு பலகையை
அளிக்க நிதமும்
பள்ளிக்கு செல்கையில்
பறிக்கும் தண்ணித்தண்டு
கல்லணை பயணத்தால்
தலை தப்பியது..

(பயணிப்போம்..23 )

எழுதியவர் : ஆரோக்யா (4-Feb-14, 12:07 pm)
பார்வை : 107

மேலே