கவிதை எழுதத் தெரியவில்லை
கவிதை எழுதத் தெரியவில்லை!
காற்றின் வாடையில்
குளிருண்டு!
மலரிதழ் நுனியிலே
வியர்வையுண்டு!
மழைத்துளி வற்றாத
நிலமுண்டு!
காற்றிலே சிலிர்த்திடும்
மழை நீருண்டு!
வெளுத்த வானமுண்டு!
அதில்-
வெண்மேகம் தவழ்ந்திட்ட
சுவடுகளுண்டு!
பறவைகளின் சப்தங்களுண்டு!
அதில்-
மௌனமாய் விழித்திருந்த
அறிகுறியுண்டு!
தேன் மதுரத் தமிழுண்டு!
அதில்-
திகட்டாத சுவையுண்டு!
கண்ணுக்குள் கனவுகளுண்டு!
அதில்-
இதயங்களைச் சொக்க வைக்கும்
இதமான உணர்வுகளுண்டு!
வெள்ளைத் தாளுண்டு!
அதில்-
கனவுகளைச் செதுக்கி வைக்க
கருநீலப் பேனாவுண்டு!
மேசை விளக்குண்டு!
அதில்-
மெதுவாக அதிர்கின்ற
சுடரும் உண்டு!
இத்தனை எனக்கிருந்தும்-
கற்பனை வளமிருந்தும்-
உன்முகம் காணவில்லை!
ஊனமாய் வார்த்தைகள்...
...கவிதை எழுதத் தெரியவில்லை!