என் அம்மாவின் மடியில சேபா 1

.......என் அம்மாவின் மடியில.....(1)

மண்சட்டி ஒன்றெடுத்து
உப்பு புளி ரெண்டும் இட்டு
சுட்டெடுத்த கத்தரிகாய
மத்து கொண்டு
நான் கடஞ்சு
மகனே நான் தர,

சட்டியில நெய் மணக்குதுன்னு
சாதம் போட்டு விரவி உண்ண
என் மகன் தின்ற சோறு
மீதம் கொஞ்சம் இருக்குதுன்னு
எச்சில் சோறையும்
அமுதமுனு உண்டவளே!

வாட காத்தடிக்க
போர்த்திக் கொள்ள
போர்வை இல்லை
ஆத்த உடுத்திய சேலையில
ஒண்டி நான் உறங்குறேனே!

கழனியில களை பறிக்க
களத்து மேட்டில
கருவேலம் மரத்துலதான்
தொட்டில் கட்டி போட்டவளே!

மன்னவன் தூங்குறான்னு
மடிமீது தாலாட்டி
தன் இரத்தத்த பாலாக்கி
என் பசி தீர்த்தவளே!

வட்டியிலா சோறு இல்லையின்னு
வயலில பதரெடுத்து வருத்தவளே!
கைகுத்தி நெல்லரிசி
கஞ்சிதான் பொங்குனேயே!

பொட்டல் காட்டில் மழை அடிக்க
மகனே! நனையாதன்னு தன்
முந்தானைய குடையா
புடுச்சவளே!


கழனியில கதிரறுக்க
பதறு தூத்தயில
பாவிமகன் கண்ணுலதான்
தூசி விழுந்ததுன்னு
துடுச்சுதான் போனேயே!

தொடரும் ..........

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (10-Mar-14, 11:37 am)
பார்வை : 364

மேலே