மண்

மண்
என்னைப் படைக்க
இறைவன் தேர்ந்தடுத்த
மூலப் பொருள்....
தாய் ஈன்ற பின்
தவழ்ந்து நான்
நடை பழகவே
மடி கொடுத்த
மற்றுமொரு தாய்
குழந்தை பசி, தாகம் தீர்க்க
தாயோ பால் சுரக்கிறாள்...
நீயோ உயிரினம்
அனைத்துக்குமாய் ஊற்றெடுத்து
நீர் சுரக்கின்றாய்...
சுரந்த நீரிலே
மரம், செடி, கொடியென
கொடுத்து அதிலே உண்ண
உணவும் அளிக்கின்றாய்...
வாழும் போது மண்ணுக்காய்
எத்தனையோ போட்டிகள்
இறந்த பின்னர் அனைத்தும்
அடங்கியே அமைதியாக
அடிமையாய் மண்ணுக்குள்...
மண்ணிலே !
பிறந்ததென்னவோ சில நொடிகளில்
தவழ்ந்து திரிந்தது சில வாரங்கள்
நடந்ததும் சில காலமே
தளிர் நடையும் சில காலமே...
புதைத்து இழுத்து மூடிய
பின்னரே இந்த மண்
தின்னப்போவது மட்டும்
பல காலங்களுக்கு...