சனநாயகக் கைகளே

நிற்காமல் செல்லும்
பேருந்தைப் பார்த்து,
கெட்ட வார்த்தை சொல்லி
நீளும் கைகள்,

பத்துமாத கர்ப்பிணியையும்
பரதநாட்டியம் ஆடவைக்கும்,
பல்லாங்குழி சாலை கண்டு
தலையிலடித்து
நோகும் கைகள்,

மங்கல்யானுக்கு முன்பே
செவ்வாய் தொட்ட,
விலைவாசியின்
உயரம் எண்ண,
விரல் போதாமல்
வாடும் கைகள்,

அனுதினமும் செய்திகளில்
அனுமர் வாலாய் நீளும் -
ஊழல் கதைகள் உண்டு
உறங்க மறுக்கும் தலைக்கு,
அமிர்தாஞ்சனம்
தடவும் கைகள்,

சிறுதொழிலின் வயிற்றலடித்து,
சீமைக்கம்பெனிகளை
விட்டு வைக்கும்,
அக்னி நட்சத்திர நண்பகலையும்
அரையிருட்டாய் மாற்றிவைக்கும்-
மின்வெட்டை தோற்கடிக்க,
மெழுகுவர்த்தி
தேடும் கைகள்,

ஊரெங்கும் லஞ்சமென்று,
ஒப்பாரி வைத்து,
ஓலமிட்டு,
தனக்கென்று வந்தால் மட்டும்,
தலையைச் சொறியும்,
அத்தனை கைகளும்,

வாக்குப்பதிவு நாளன்று,
வரிசையிலேதான் நின்று,
ஓட்டை அமுக்காமல் - வீட்டு டிவி
ரிமோட்டை அமுக்குவதும்
ஏனோ?..

—————————————————————

பி.கு : இந்தக் கவிதை ஆளும் காங்கிரஸை மனதில் வைத்து எழுதப்படவில்லையென்றாலும், அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.

எழுதியவர் : ஈ.ரா. (19-Mar-14, 6:23 pm)
பார்வை : 155

மேலே