என்னவனே வருவாயா - குமரிப்பையன்

பாலைவனத்தில் வாழும் என் மன்னவனே
பாலை வார்க்க வருவாயோ நீ என்னவனே
அலைபேசியிலே அழுது வடித்தால் தீராதே
அலையடிக்கும் எந்தன் மனமும் ஓயாதே..!

மணமகள் வேசம் இரு மாதங்கள் நுகர்ந்தாயே
மனதின் நேசம் காணாமல் நீயும் பறந்தாயே..!
பணத்தின் வாசம் கண்டதும் எனை மறந்தாயோ
பதியாய் பாசம் கொண்டேன் நானும் அறிந்தாயோ..!

அணைத்த அன்பு தினமும் வந்து கொல்கிறதே
அடிகடி உன் நினைவுகள் உள்ளே கொதிக்கிறதே.!
ஆண்டாய் மாதம் மாறியதை நீயும் கண்டாயோ
ஆசை மோகம் கூறியதை நீ மென்றாயோ..!

ஒருமழலை குரலை காதும் கேட்க துடிக்கிறதே
இருவிழியின் அழுகை பாதம் நோக்கி விழுகிறதே.!
தனிமை தவிப்பு தாய்மை கொண்டு பிறவாதே
தன்மை உணர்ந்து தாயகம் திரும்பு மறவாதே..!

காலம் முழுதும் காத்து இருப்பேன் நினைவோடு
காலன் வந்தால் கையோடு செல்வேன் கனவோடு..!
காசும் பணமும் கைலாசம் வருமா என்னோடு
காதல் படித்து ஒன்றாய் வாழ்வோம் அன்போடு..!

பதிலே வேண்டாம் பணியை விட்டு பறந்துவிடு
பதிவு சொல்லும் பொய்மை எல்லாம் மறந்துவிடு.!
பகட்டு வாழ்க்கை பதவி எண்ணம் துறந்துவிடு
பறந்து வந்து என்னிதய வாசலை திறந்துவிடு..!

இப்படிக்கு
எதிர்பார்த்து மனைவி.

எழுதியவர் : குமரி பையன் (20-Mar-14, 12:10 am)
பார்வை : 334

புதிய படைப்புகள்

மேலே