தாகத் தனிமரம்

காதல் மேகம்
தேடுதிந்த
கோடைத் தனிமை
கண்ணீர் ஆவி
கலந்த
உப்புக் காற்றினிலே
வெந்நீர் தேகம்
வெந்து வதைகின்றது
மனப் பன்னீர் பூக்களின்
காம்புகள் எல்லாம்
மலர் சுமக்க
திராணியின்றி
பரிதவித்துக் கிடக்கின்றன
எண்ண அருவியின்
சுவடுகள் இங்கே
ஈரம் தேடியே
வாய் பிளந்து கிடக்கின்றது
இரு திசை
கரைகளிலும்
இன்ப இலைகள்
துன்பம் பழுத்து
உதிர்ந்து விழுந்து
காய்ந்து கருகிச் சருகாகி
வருவோர்
போவோரிடத்தில் எல்லாம்
நரம்புகள் உடையும்
ஒப்பாரிப் பாடல் படிக்கின்றன..!!
களங்கமில்லா
நிலவொளியோ
கரிய வெயிலாகி
கரிக்கச் செய்கின்றது
கனவென்னும்
விதைகளை எல்லாம்
காட்டுமிராண்டி வெயிலதுவோ
வீர வெட்டியானாகி
இறந்துகிடக்கும் என் பகல் பொழுதினை
எரித்துச் சாம்பலாக்குகின்றது..!!
அந்நிய தேசம்
சென்றிருக்கும்
என் தலைவா..
இவளது மெல்லிய தேகம்
இலகி மெலிந்து
உடைந்து உதிர்ந்து விழும்முன்
விரக தாபம் தீர்த்திடவே
விரைந்து நீயும் வருவாயடா..!!
சொல்லிய
வாக்கினை காத்திடவே
காலத்தே
கார் மேகமென
பறந்தே நீயும் வருவாயடா..
அடை மழையினில்
தளிர்திடவே நிற்கின்றேன்
அதன் காற்றினில்
மனம் பூத்திடவே
நான் காத்திருக்கின்றேன்
உயிர் தீண்டலின்
திறவுகோல்
எடுத்துச் சென்ற என் காதலா..
இந்த பெட்டகம்
உடையும் முன் காதல் திறவுகோல்
கொண்டு நீயும் வருவாயடா.. வெகு சீக்கிரமே..!!