கருவறைக் கனவுகள்
அம்மா !
அம்மா !
உன் கருவிலிருந்து
உள்ளூரக் கதறும்
என் குரல்,
உன் காதில்
விழவில்லையோ !
அம்மா !
உன் தொப்புள் கொடி
முடிச்சின் உறுதியில்,
இவ்வுலகை
முதன் முதலாக
சுவாசிக்கும்
வெற்றிக் களிப்பில்
கை கால்களை அசைத்து,
காற்றினை அடிக்க
ஆசை !
அம்மா !
உன் வயிற்றினுள்
வளரும் போது, உன்னை
எத்தனை முறை
எட்டி உதைத்து
முட்டித் தள்ளியிருப்பேன் !
அத்தனைக்கும் சேர்த்து
மொத்தமாக உன் மடியில்
அழுது தீர்க்க
ஆசை !
அம்மா !
என்னைத் தொட்டுப்
பார்க்கும், உன்
விரல்களை
விடாப்பிடியாகப்
பிடித்துக் கொள்ள
ஆசை !
என்
உடல் வளர்க்க
உன் மார்பில்
உதிரம் உறிஞ்ச
ஆசை !
இப்படி
எத்தனையோ
ஆசைகள், அம்மா !
உன் கருவில்
நான் வளரும் போதே !
ஆனால் ...
மகனை எதிர்பார்த்த உனக்கு
மகளாய் நான்
பிறந்ததால்
மனித வாழ்வை
எனக்கு
மறுத்துவிட்டாயா ?
அம்மா !
கருவில் எனக்கு
உரு கொடுத்து,
உயிர் கொடுத்து,
உள்ளம் கொடுத்து,
உணர்வுகள் கொடுத்து,
மறுபடியும் இந்த
மண்ணிற்கே
உரமாய் கொடுத்து விட்டாயே !
அம்மா !
பத்து மாதம்
பாடுகள் பல பட்டு
பெற்றெடுத்த என்னை
பரந்த பூமிக்குள்,
புதைத்த
காரணம்தான் என்ன ?
என் தாயே !
தாயே !
உன் கருவறையை
என் கல்லறையாக்காமல்,
என் தொட்டிலை
எனக்கு பாடையாக்கும் முன்
இப் பூமித்தாயின்
மடியில் கிடத்தியதற்கு
நன்றி தாயே !

