கொதி மணல் தேசத்து பலியாடுகள்

புத்த தர்மம் செத்த தர்மமாய் போக
மான்கள் கூட்டமொன்றின்
வம்ச வரலாற்றை
மயானம் வரை கொண்டு வந்து
கொன்று,தின்று மிச்சத்தை
மண்ணின் மத்தி வரைக்கும்
வெட்டிப் புதைத்த கதையின்
நீதி இறந்த சோகம் நீங்குமுன்
அநீதிப் பிசாசுகள் பசியாற
அடுத்த விருந்து தயாராகி விட்டது

வரண்ட இறுக்கத்தின்
வித்திலிருந்து வெடித்து விஷச்செடிகள்
அரச வேருடன் பின்னி பீதியாய் முளைக்க
மேய்ச்சல் தரையெங்கும் முள்காடுகள்
வாழ்வுக் கவளம் தொண்டையில் சிக்க
இறை நேசர்களின் நேர்ச்சை
மறி படுகின்றன பலியாடுகளாய்

அடுப்பினை மூட்டியவன்
குளிர் தணிந்த
வெல்வெட்டு வெது,வெதுப்பில்
காவி நூல் திரித்து
பிரித் பாராயணம் ஓத
அடுத்த வேளைக்குரிய அன்னம்
“மட்டன்” புரியாணியாய்
காலச்சட்டியில் கறியாகி
பலியாடுகள் சமை படுகின்றன

வெறிக் கங்கில்கள் தீ நாக்காய் பரவ
இனிக்கும் கரும்புகளின் இருப்பு
விறகாய் பொசுங்குகின்றன..
சாம்பல் மேடுகளை சமீபித்தபடி
இலங்கை தீவின் திடலெங்கும்....!


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (21-Jun-14, 6:02 pm)
பார்வை : 69

மேலே