எங்க ஊர்ல பொண்ணு இல்லீங்க

தரைகிணத்தில்
தண்ணிக்காக நீ வந்த ...
தவலையில தண்ணிசேந்தி
உன்தலையில் வச்சேன்.

ஏரிக்கர கிழக்கால
அம்மன் கோயில்...
வெள்ளிசெவ்வா ஆஜராகி
உன்கண்ண மொ(ய்)ச்சேன்.

அரிசிகுத்த மிஷினுக்கு
உங்கம்மா போவும்...
அக்கா கொடுக்கான்னு
நெல்ல சுமந்தேன்.

கள்ளுண்ட உங்கப்பன்
கவுந்து கெடப்பான்...
வண்டியில கொண்டாந்து
வீடு சேத்தேன்.

நீ சிரிச்சா சும்மாவே
நான் சிரிப்பேன்,
நீ அழுதா நிசமாவே
நான் அழுவேன்.

நான் உன்ன காதலிச்சேன்
ஊருக்கே தெரியும்,
நீ என்ன காதலிச்ச
எம்மனசு அறியும்.

இப்படியே நான் நினைக்க
நல்லாத்தான் போச்சு,
எப்பவுமே கூட்டாளிங்க
இதேத்தான் பேச்சு.

ஒருநா ஞாயித்துகிழம
ஊர்புள்ளைங்க சத்தம்,
உங்கவீட்டு களத்துல
ரெண்டு காரு வெளிச்சம்.

தூரத்து சொந்தங்களாம்
பட்டணத்து வீடாம்...
ஒன்னுவிட்ட அத்த ஒருத்தி
உன்னபத்தி சொன்னாளாம்.

எல்லாத்துக்கும் புடிச்சு போச்சு
என்கதயும் முடிஞ்சுபோச்சு...
பட்டணத்தான் பொண்ணுகேட்டான்
பட்டிக்காட்டான் கொடுத்தாச்சு .

பொண்ணுபுடிக்கறவன் ஆகிறான்
பட்டணக்கார பயலுக...
பவரகாட்டி தூக்கறான்
பட்டிகாட்டு கிளிகல .

உங்க ஊட்டு பொண்ண மட்டும்
சீமையில தருவீங்க...
உங்களுக்கு வேணுமுன்னா
வரப்போரம் தேடுவீங்க.

பேரபுள்ளைங்க பரிசத்துக்கும்
பட்டிக்காட்டுல தேடாதீங்க
சத்துணவு ஆயா தவிர
சத்தியமா கெடைக்காது!

எழுதியவர் : RamVasanth (17-Jul-14, 12:39 pm)
பார்வை : 143

சிறந்த கவிதைகள்

மேலே