என்னுயிர் நீதானே பாகம் 3

"" என்னுயிர் நீதானே..""
( பாகம் மூன்று )
மாமியாரின் குரலில் தொனித்த அன்பிலும், அனுசரணையிலும் மனம் நெகிழ்ந்த மதுமிதா, "அத்தை" என்று கேவியபடி அழைத்து அப்படியே அவள் காலடியில் விழுந்து வணங்கினாள். " என்னம்மா இது.. எழுந்திரு எழுந்திரு " என்று அவளைத் தூக்கி, உள்ளே அழைத்துப் போகும்படி கண்ணால் மீராவிடம் சைகை காட்டி, " மதுமா, உள்ளே போமா, இவர்களிடம் நான் பேசிக்கொள்கிறேன்" என்று அவளையும் சமாதானப்படுத்தினாள்.
வீட்டினுள் நுழைந்த மதுமிதா, நேரே சரவணனின் அலங்கரிக்கப்பட்ட போட்டோவின் அருகில் போய் அமர்ந்தாள். அவன் முகத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு அப்பழுக்கற்ற முகம். தந்தையின் மறைவுக்குப் பின் கடும் உழைப்பை மேற்கொண்டு தாயுடன் மூன்று தங்கைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து, அதற்குப் பிறகே மதுமிதாவை எதேற்சையாக ஒரு கோயிலில் சந்தித்து, அவள் மேல் ஈர்க்கப்பட்டு, காதலைக் கௌரமாக வெளிப்படுத்தி, அனைவரின் ஆசியுடனும் திருமணம் முடித்து, உன்னதமான ஒரு ஆழ்ந்த காதலை அவள் மேல் செலுத்தி, அதே வேகத்தில் பிரிந்தும் விட்டான் இந்த உலகத்தை விட்டு. "இவ்வளவு விரைவில் என்னைவிட்டு பிரிந்து விடுவாய் என்று தெரிந்து தான் உலகின் மொத்த அன்பையும் என் மேல் செலுத்தினாயா சரவணா".. மதுமிதா தனக்குள் தேம்பினாள்.
கூடவே அவள் நினைவில் ஒடி வந்தது முதன் முதலில் அவன் மாங்கல்யத்தின் மேன்மை பற்றி அவளிடம் விவாதித்தது. திருமணம் முடிந்த முதல் நாள், சரவணன் அவளிடம் "மதுமிதா, இன்று இந்த அறையில் நாம் இருக்கின்றோம் என்றால், அதற்கு காரணம் உன் பெற்றோரோ என் உறவினர்களோ காரணம் இல்லை. அதற்கு முக்கிய காரணமே வேறொன்று, அது என்ன உனக்கு தெரியுமா?" "அப்படியா, அது என்ன? எனக்கு தெரியாதே.." என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு, கண்களில் மட்டும் குறும்பு கொப்புளிக்க கேட்டவளின் அழகில் ஒரு கணம் மயங்கி, தான் சொல்லவந்த விஷயத்தை மறந்து விழித்த அவனை சொடுக்கு போட்டு தன் பக்கம் இழுத்தாள் மதுமிதா.
அவள் அணிந்திருந்த மாங்கல்யத்தை தன் கையில் பிடித்தவன், "இந்த மஞ்சள் கயிறும் அதில் இணைந்திருக்கும் இந்தத் தாலியும் தான் இந்தப் பட்டத்தரசியை என் அந்தப்புறத்தில் நுழையும் உரிமையை கொடுத்துள்ளது. ஒரு பெண்ணுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இந்த மாங்கல்யம் தான். ஒரு பெண் திருமணமானவள் என்ற கௌரவத்தைக் கொடுப்பதும் இந்த தாலிதான். எந்த சூழ்நிலையிலும் ஒரு முறை கழுத்தில் ஏறிய தாலியை அவள் சாகும் வரை கழற்றவேக் கூடாது. இதுதான் என் விருப்பம்." வேகமாக பேசிக்கொண்டே போனவனை கைதட்டி ஆரவாரப் படுத்திய மதுமிதா, "சரிரிரிரி.. பெண்கள் திருமணமானவர்கள் என்று காட்ட மாங்கல்யம் இருப்பது போல், ஆண்கள் மணமானவர்கள் என்று காட்ட என்ன இருக்கின்றது. இருங்க அத்தையிடம் சொல்லி ஒரு மஞ்சள் கயிறு வாங்கி வந்து உங்கள் கழுத்தில் கட்டிவிடுகின்றேன். அப்போதுதான் எந்தப் பெண்ணும் உங்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டாள்" என்றபடி கதவைத் திறந்து வெளியே போக முயற்சித்தவளை, தலையணையை விட்டெறிந்து சிரித்த சரவணனையும் காட்சியையும் இன்று நினைவு கூர்ந்த மதுமிதா பொலபொலவென்று கண்ணீர் உகுத்தாள்.
வெளியே காரசாரமாக விவாதம் ஒடிக்கொண்டிருந்தது. இந்தப் பெண்ணுக்கு மறை கழன்று விட்டதா, புத்தி பேதலித்து விட்டதா என்று யாரோ கேட்க, கணவனின் மரணத்திற்கு பின் தாலி அறுப்பது காலங்காலமாய் இருக்கு மரபு தானே என்று யாரோ ஒத்தூத, திடிரென்று கணீரென்று ஒரு குரல் கேட்டது. " என்ன மரபு.. அந்தக் காலத்தில் கணவன் இறந்ததும் மனைவியும் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. கொடுமை என்று நாம் விலக்கிடவில்லையா? பிறகு வெள்ளையுடுத்தி மொட்டையடித்து மூலியாக மூலையில் ஒடுக்கிவைத்த காலத்தை சித்திரவதை என்று நாம் சீர்திருத்தவில்லையா? இன்று கைம்பெண்கள் வண்ண உடை உடுத்துவதை நாம் அங்கீகரித்து தானே இருக்கின்றோம்.. இன்று இந்தப்பெண் அவள் விருப்பத்தை சொல்கின்றாள். இனி இதுதான் நடைமுறை சட்டம் என்று அவள் சொல்லவில்லை. என் வாழ்க்கையை நான் இப்படித்தான் வாழ விரும்புகின்றேன் என்று சொல்கின்றாள்.. மரபுக்கு கொடுக்கும் மதிப்பை கொஞ்சம் மனித உணர்வுக்கும் கொடுங்க .. கணவனை இளம் வயதிலேயே இழந்திருக்கும் இந்தப் பெண்ணின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. பரிதாபப்படுங்க. அவளுக்கு என்று எப்போது தோன்றுகிறதோ அப்போது கழற்றட்டும். இதற்கு மேலும் இதைப்பற்றி விவாதிக்க ஒன்றுமில்லை.." நீளமாக பேசியவரை யாருமே இடைமறிக்கவில்லை. மதுமிதாவுக்குத் தெரியும் பேசியவர் சரவணனின் பெரியப்பா என்று. தந்தையின் மறைவுக்குப் பின் பெரியப்பாவின் சிறந்த வழிகாட்டலில் தான் தன்னால் ஒரு மேன்மையான நிலைக்கு வரமுடிந்தது என்று சரவணனே பலமுறை சொல்லியிருக்கான். பெரியப்பாவின் பேச்சுக்கு அங்கு எப்போதும் மறுபேச்சு கிடையாதாம்.
மதுமிதா ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்ட படி சரவணன் புகைப்படத்தை பார்த்தாள். "சரவணா, நான் செய்தது சரியா தப்பா.. எனக்கு தெரியல.. நீங்கள் விருப்பப்பட்ட விஷயம்.. நான் ஏற்றுக் கொண்ட விஷயம்.. ஆனால் இதை இவ்வளவு சீக்கிரம் நம் வாழ்வில் செயல்படுத்த நேரிடும் என்று நான் நினைக்கவேயில்லை. என் உருவம் மதுமிதாவின் பெயரோடும், என்னுயிர் நீங்களாவும், நீங்கள் அணிவித்த மாங்கல்யம் எனது பாதுகாப்பு அரணாகவும் என் கடைசி மூச்சு முடியும் வரை இருக்கும். நான் சொல்வது உங்களுக்கு புரிகின்றதா, நீங்கள் சம்மதிக்கின்றீர்களா? என்னோடு எப்போதும் இருப்பீர்களா?" மதுமிதா மானசீகமாக சரவணனிடம் இறைஞ்சினாள். அவள் கூற்றை சரவணன் ஆமோதிப்பது போல் ஒரு வெள்ளை நிற வண்ணத்துப்பூச்சி, சரவணன் படத்தில் நின்று மாலையை முகர்ந்து, அங்கிருந்து பறந்து வந்து மதுமிதாவின் தோளில் அமர்ந்து, கரத்தில் அமர்ந்து அவளை ஒரு சுற்று சுற்றி மீண்டும் சரவணன் படத்தில் போய் அமர்ந்தது.. மதுமிதாவின் மனமும் நிறைந்தது.
****** முற்றும் ******
பெ.மகேஸ்வரி