அறுந்த காலனியில் வாழும் உடைந்த குடை கட்டிகள்

வரிந்து கட்டிக்கொண்டு
யாருடைய எல்லைகளுக்குள்ளும்
வால்முறுக்கி அத்து மீறி
வாழத்தெரியாததால் தான்
அவர்கள் குடை கட்டியாய்
ஆகியிருக்க வேண்டும்
ஒரு பழைய குறடு
நான்கைந்து கம்பித்துண்டுகள்
குப்பைக்கு வீசப்பட்ட சில குடைகள்
எளிமையின் அடையாளங்கள்
அவர்களது வாழ்வின்
பெரும் பங்குக்குரிய பாத்திரங்கள்
என்பதற்கு இது போதும்
குடையின் விலையளவு அவர்களது கூலி
ஒரு நாளும் வாய்த்து விடுவதில்லை
ஆயினும்;உடைந்தவுடன்
அவர்களிடம் ஒப்படைத்து
பேரம் பேசுவதில்
கௌரவம் பார்க்காமல் நாம்
கஞ்சத்தனத்தை எடுத்து
கச்சை கட்டிக்கொண்டு இறங்குவது
பஞ்சம் பிழைக்க வந்த பாவங்கள் முன்தான்
சடப் பொருட்களை
சம்பாதிப்பதில் காட்டும்
கரிசனையில் கால் அளவேனும்
மனிதத்துவத்தின் மேல் எவர்க்கும்
மரியாதை வருவதில்லை
குடை கட்டியோ,செருப்பு தைப்பவனோ
சிக்கிக் கொண்டால் மட்டும்தான்
சிக்கனம் பேணுகிறோம்
செருப்பால் அடித்தாலும்
புத்தி வராத சாதியாய்
அக்கணம் மாறுகிறோம்
செருப்போ,குடையோ
வாங்கும் இடத்தில் வைக்காத பேரத்தை
அறுந்து,உடைந்தபின்
சரிக் கட்டுபவன் முன்னால்தான்
சண்டித்தனம் பேசி
வரிந்து கட்டிக்கொண்டு
வாய் சவுடார் விட்டு
கூலிக்கு மரடிப்பவனிடம்
குத்தகை பேசுகிறோம்
காலடிக்கு வருபவர்களை
கால் தூசிபோலாவது
கருதாமல் விடுவதனால்தானோ என்னமோ
முன்மாரி,பின்மாரி போல் பேயும்
முன்புபோல் இப்போதெல்லாம்
மொத்தத்தில் மழையே இல்லை
கிடந்த இடத்திலேயே கிடக்கும்
குடை கட்டிகள் பிரார்த்தனையில்
மழை வருமோ,இல்லையோ
கண்களில் நீர் பனிக்க காத்திருக்கிரார்கள்
பொய்த்த வானத்தின் கீழ்
பாவிக்க முடியாத பழைய குடைகளாய்!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை