மனவயல் விவசாயம்

அளக்கமுடியா பரப்புள்ள
அகவயல் என்னுடைமை.
அதிசய விவசாயம்
அதில் நடக்கும் எப்பொழுதும்.

வரப்பில்லா பரப்பில்
விதைத்தவுடன் விளையும்
விதைத்த கையொடு
அறுக்காவிடில்

விதைத்ததொன்று
விளைந்ததொன்றாய்i
விந்தை நிகழும்
விபரீதமாகும்.

சில நேரம்
விதைத்தது
வெளிவராமல்
உள்ளாழம் வளரும்
வேரிலே கிளைவிட்டு
பூக்கும் காய்க்கும்.

எடுத்தவுடன் முளைக்கும்
களைத்தோட்டம்.
வளைதோண்டி வாழும்
கவலை எலிக்கூட்டம்.

வானம்பார்த்த பூமி
சாமி அருள்மழைக்கு
காத்திருக்குந்த காணி.

மழையை நம்பி
விதைத்ததெல்லாம்
எலி தின்ற அவலம்.
களைமட்டும் மீதமாகும்
கொடுமை விவசாயம்.

வயலின் தன்மை புரியாமல்
விளங்கவில்லை விவசாயம்.
விட்டுவிட முடியாமல்
தப்புத்தப்பாய் நடக்கும்.

மண்ணும் புரியவில்லை
மழையும் வருவதில்லை
எலிகள் கொழுத்தலையும்
களைகள் செழித்தாடும்

மனவயல் விவசாயம்
தினம் நடக்கும் பேரவலம்
காணப் பொறுக்காமல்
கவனங்கூடிச் சிந்தித்தேன்.

செய்யுந்தவறெல்லாம்
சீராகத் தெரிந்துகொண்டேன்.
செய்வதென்ன மேலுமெனச்
சிறப்பாகத் திட்டமிட்டேன்.

மனவயல் முழுதுங்கொத்தி
களையாவும் எடுத்தெறிந்தேன்.
வளையாவும் தூர்த்தெறிந்து
எலிக்கூட்டம் அழித்திட்டேன்.

வரப்புக்கட்டி வயலெங்கும்
நீர்பாய வழியமைத்தேன்.
ஓரமாய்த் தோண்டியோர்
ஊற்றுமிகு கிணறமைத்தேன்.

மண்ணைத்தின்று
மண்தன்மை
கண்டறிந்தேன்.

நற்பயிர் தேர்ந்தெடுத்து
நல்விதைதான் விதைத்தேன்.
மழைநீர் விழையாமல்
மனக்கிணற்று நீரிரைத்தேன்.

நந்நூல் பயின்றுவரும்
நல்மருந்துதனைத் தூவி
தலையெடுக்கவல்லாமல்
களைதோன்றக் களையெடுத்தேன்.

வயலிலே குடிலமைத்து
வயலே கதியென்று
விவசாயம் செய்யவிப்போ
விளைச்சல் நடக்குதைய்யா.

ஒருவழியாய் பயிர்வேலை
ஓரளவில் ஒழுங்காச்சு.
இனிமேல் துயரில்லை
மனவயல் தரிசில்லை.

விதைப்பு வளர்ப்பு
வித்தை தெரியும்
அறுப்புப் பொறுப்பும்
அழகாய் வரும்.

மனவயல் விவசாயம்
தினந்தருது மகசூலும்
அள்ளியுண்டு மிச்சமெலாம்
அனைவருக்குந்தர விருப்பம்.

எழுதியவர் : இல.சுவாமிநாதன் (10-Sep-14, 10:42 am)
பார்வை : 75

மேலே