காலத்தைக் கடியாதீர்
காலம்..
உலகையும் நம்மையும்
இணைக்கும் பாலம்.
வாழ்வியல் கணக்குக்கென
மானிடம் கணித்தது.
இறையின் இட்டத்தினால்
இதுவும் பிறந்ததென்பார்.
ஓடுங் காரணம்
ஒருவரும் அறிந்திலார்.
பறந்து திரிவோரின் தாகம்
இருத்தியிருப்போரின் நோவு
காத்திருப்போர்க்கு எரிச்சல்
சோர்ந்திருப்போர்க்கு வலி
நம்பிக்கையுள்ளோர்க்கு ஆவல்
அற்றோர்க்கு துயரம்
முயல்வோர்க்கு முதலீடு
முயற்சி துறந்தோர்க்கு எதிரி
என
பலருக்கும் பலவிதமாய்
தோன்றுவது அறியாது
ஒருமையில் அது
ஓடிக்கொண்டேயிருக்கிறது.
காலத்தின் முதுகேறி
காலத்தைக் கழிப்போரே
காலம் ஏதும் தருவதில்லை
காலம் கையில் கணக்கில்லை.
நம் விருப்பம் ஈடேற
நாம் வினைகள் புரிகின்றோம்.
விதைப்பும் வளர்ப்பும்
நாம் செய்ய
அறுப்புக்கது காரணமோ?
விரும்புவது கிட்டுவதும்
கைவிலகிப் போவதுவும்
வெறுப்பது விலகுவதும்
விலங்காகத் தளைவதுவும்
வாய்ப்புகள் வாய்ப்பதுவும்
வரங்களாய் தேறுவதும்
வீணில் வீணாகி
வலியாக மாறுவதும்
காலம் கைகாட்ட
எக்காலத்தும் நடப்பதில்லை.
காலத்தின் கோலமென
காலத்தைக் கடியாதீர்.
தீதும் நன்றும்
காலம் தருவதில்லை.
காலத்தின் வேலையெல்லாம்
காலத்துள் ஓடுவதே.