கடவுள் கண்டுகொண்டிருக்கும் கனவு

பெரிய மனுஷியைப் போல
நடந்து கொள்ளும்
ஒரு சிறுமியும்,

சிறுமியைப் போல
நடந்து கொள்ளும்
ஒரு பெரியமனுஷியும்,

ஒருவிதத்தில்
இன்னும் அழகானவர்கள் !

=========================

இருட்டையும்
சிந்திக் கொண்டுதானிருக்கிறான்
சூரியன்
பூமியெங்கும்
நிழல்களாக !

=========================

பணியிடம்
திரும்புவதற்கான
புகைவண்டிப் பயணத்துக்கு
உணவு கட்டிக்கொடுக்கும்
போது மட்டும்
பழைய களை
வந்துவிடுகிறது
அம்மாவுக்கு !

=========================

ஒருவார
தாடியோடு
ஊருக்கு வந்தால்
இப்போதும்
திட்டுகிறார்
அப்பா !

அப்பா,
இப்போதும்
திட்டுவதற்காகவே
ஒருவார தாடியுடனே
ஊருக்கு வருகிறேன்
நான் !

=========================

கடவுள்
கண்டு கொண்டிருக்கும்
கனவாகவும்
இந்த உலகம்
இருக்கலாம் !

=========================

நீண்ட நேரம்
காத்திருந்தும்
பாடுபொருள்
கிடைக்காமல்
கவிதையைக்
கைவிட்டபடி
எழுந்து செல்கிறேன் !

ஏமாற்றத்துடன்
திரும்புகிறது
அதுவரை
என் ஜன்னலுக்குள்
தலை நீட்டிக்கொண்டிருந்த
வெயில் !

=========================

வானத்து
நட்சத்திரப் புள்ளிகள்
இணைத்து
தேவதை வரையும்
கலையை
எப்படியோ
கற்றுக்கொண்டுவிடுகின்றன
குட்டிப்பாப்பாக்களின்
கண்கள் !

=========================

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (25-Sep-14, 6:53 pm)
பார்வை : 153

சிறந்த கவிதைகள்

மேலே