கவிஞர் பட்டுக்கோட்டை

தமிழ்த் திரை உலகில் அழுத்தமான முத்திரை பதித்துள்ள கவிஞர்கள் இருவர். ஒருவர், கவியரதமிழ்த் திரை உலகில் அழுத்தமான முத்திரை பதித்துள்ள கவிஞர்கள் இருவர். ஒருவர், கவியரசர் கண்ணதாசன் (1927--1981). இன்னொருவர், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1930--1959). முன்னவர், ஆர்மோனியப் பெட்டிக்கு அழகுத் தமிழை அறிமுகப்படுத்தி வைத்தவர்; பின்னவர், ஆர்மோனியப் பெட்டிக்கு மக்கள் தமிழை அறிமுகம் செய்து வைத்தவர்.


1951-ல் படித்த பெண் என்னும் திரைப்படத்திற்காக பாடல் எழுதித் திரையுலகில் அடியெடுத்து வைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த உலகில் வாழ்ந்த காலம் இருபத்தொன்பது ஆண்டுகளே. எனினும் திரைப்பாடல் துறையில் நிறையச் சாதனை படைத்துள்ளார். பட்டப் படிப்புப் பயிலாத அவர், வாழ்க்கை என்னும் அனுபவப் பள்ளியில் கற்றுத் தேர்ந்த மக்கள் கவிஞராகத் திகழ்ந்தார். ஒரு பாடலில் இவ்வாறு பாடினார்;


வெளியே படிக்க வேண்டியது
நெறைய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா - சிலர்
படிக்க மறந்தது நெறைய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா”
பலரும் படிக்க மறந்த பாடங்களைப் பட்டுக்கோட்டை படித்தார். இந்த படிப்பே அவரை ஒரு பாட்டாளிக்
கவிஞராக்கியது.


பட்டுக்கோட்டையாரின் முத்திரைப் பாடல்
இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்; வீண்
அனுதாபம் கண்டு நீ
ஒருநாளும் நம்பிடாதே!”


- பதிபக்தி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் தான் அனைவரையும் பட்டுக்கோட்டையாரிடம் ஈடுபடுத்தி ஆற்றுப்படுத்தியது. "எளிய சொற்கள், ஆழமான பொருள், நினைத்து இன்புறத்தக்க உவமை” என இந்தப் பாடலின் தனித்தன்மைகளை நெஞ்சாரப் போற்றிக் கூறுவார் குன்றக்குடி அடிகளார்.


ஏழை மக்களின் அவல நிலை


விவசாயி, மாடு மேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணி வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் என 29 ஆண்டுக் கால வாழ்வில் 17 வகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்


பட்டுக்கோட்டை. ஜெயகாந்தன், "பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி - அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி” எனப் பட்டுக்கோட்டையைப் பற்றி பொருத்தமாக கூறுவார். ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளுக்காக எப்படி உழைக்கிறார்கள்? தாலி கட்டிக் கொண்ட மனைவி போல் உழைக்கிறார்களாம். இரும்புத் திரை என்னும் திரைப்படத்திற்காக எழுதிய பாடலில் இவ்வழகிய உவமையைக் கையாண்டுள்ளார் பட்டுக்கோட்டை.


உழவனும் ஓயாத உழைப்பும்
போல் நாமே, ஒன்றுபட்ட
வாழ்க்கையினில் என்றும் இருப்போம்
என்று பட்டுக்கோட்டை படைத்துக் காட்டும் காதலர்கள் ஒருமித்த குரலில் உறுதி எடுத்துக்
கொள்கிறார்கள்.
சப்பிப் போட்ட மாங்கொட்டை போல் மெலிவாங்க என்னும் பட்டுக்கோட்டையின் உவமை ஏழைத் தொழிலாளரின் அவல நிலையை காட்டுகிறது. இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு - அது, எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா? என்னும் வரிகளில் சொல்லோவியமாகிறது ஏழ்மை.
ஒற்றுமையை வலியுறுத்திய கவிஞர் மக்கள் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்பது பட்டுக்கோட்டையின் விருப்பம்; கனவு. முடியிருந்தும் மொட்டைகளாய் மூச்சிருந்தும் கட்டைகளாய், விழியிருந்தும் பொட்டைகளாய் விழுந்து கிடக்கும் மக்கள் இனம் ஒன்றுபட்டு உயரவேண்டும் என அவர் விரும்பினார்.


ஏற்றமுன்னா ஏற்றம், இதிலே இருக்குது முன்னேற்றம் என்பது அரசிளங்குமரி திரைப்படத்திற்காகப் பட்டுக்கோட்டை எழுதிய புகழ் பெற்ற பாடல். அப்பாடலில் ஏற்றம் இறைக்கும் ஏழைத் தொழிலாளர்களின் வாயிலாகத் தன் கருத்தினையும் விருப்பத்தினையும் வெளியிட்டுள்ளார்.


எறும்பு போல வரிசையாக எதிலும்
சேர்ந்து உழைக்கணும்!...
ஒடஞ்சி போன நமது இனம்
ஒண்ணா வந்து பொருந்தணும்!”
முதல்வர் நாற்காலியின் நான்காவது கால்
சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி என்பது நாடோடி மன்னன் திரைப்படத்திற்காகப் பட்டுக்கோட்டை எழுதிய புகழ் பெற்ற பாடல். அப்பாடலில் வரும் காதலி காதலனிடம் கேட்கிறாள்; மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்? காதலன் அவளுக்கு மறுமொழி கூறுகிறான்: அவன் தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே சேர்வதனால் வரும் தொல்லையடி! காதலி அடுத்துக் கேட்கிறாள்: பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு - இனி பண்ண வேண்டியது என்ன மச்சான்? காதலன் அழுத்தமான குரலில் விடை கூறுகிறான்: தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது - சிந்திச்சு முன்னேற வேணுமடி.
"என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்” என்று எம்.ஜி.ஆர். மனம் நெகிழ்ந்து பாராட்டும் அளவிற்குப் பட்டுக்கோட்டையாரின் பெரும்பாலான சமூகப் பாடல்கள் அமைந்திருந்தன.


கவிஞர் இறந்த போது அவரது உடல் சென்னையில் வாடகை வீட்டில் கிடத்தப்பட்டிருந்தது. சடலத்திற்கு அருகில் நடிகை பண்டரிபாய் அழுது கொண்டிருந்தார். அவருடைய ஒரு கையில் கவிஞருக்கு தரவேண்டிய பணமும், மறு கையில் ஒரு பேப்பரும் இருந்தன. அந்தப் பேப்பரில் பட்டுக்கோட்டையாரின் கையெழுத்தில்,


தானா எவனும் கெட மாட்டான்!
தடுக்கி விடாம விழ மாட்டான்!
போனா எவனும் வர மாட்டான்! -
மேலே போனா எவனும் வர மாட்டான்! -
இதப்புரிஞ்சிக்கிட்டவன் அழ மாட்டான்!”
என்று எழுதப்பட்டிருந்தது.


ஆம்! பண்டரிபாய் தயாரிக்க இருந்த மகாலட்சுமி என்ற படத்திற்குப் பட்டுக்கோட்டையார் எழுதிய பல்லவி அந்த வரிகள். இதுவே அவர் எழுதிய இறுதிப் பல்லவி.


வாழும் தமிழ்நாடும் வளர்தமிழும் கலைஞர்களும்
வாழ்கின்ற காலம் வரை வாழ்ந்து வரும் நின்பெயரே”
என்று கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டையாரின் மறைவை ஒட்டிப் பாடினார்.

எழுதியவர் : -முனைவர் நிர்மலா மோகன். (எழ (8-Oct-14, 2:44 pm)
சேர்த்தது : சதீஸ் குமார்
பார்வை : 149

சிறந்த கவிதைகள்

மேலே