இளவேனிற்காலம்

ஒரு
இளவேனிற் காலத்தினதிகாலையில்
நீ
எனைவிட்டகன்ற பின் தான்
சூரியன் செத்து விழுந்தது
என் காலடியில் !
கவிந்தயெனது இருளில்
ஒற்றைப் பறவையின்
அடவையொத்த
எனதத்தனை
துயரங்களையும் -
யாருக்கும் தெரியாமல்
அவசர அவசரமாயொரு
ரகசிய உலோபியென
எனது உண்டியலில்
இட்டுக் கொண்டேன் !
உனது திருஷ்டி கழிப்பிற்காக
எனது உயிரைக் கரைத்து
நான் வைத்திருந்த
ஆரத்திக் கரைசலின்
செஞ்சிவப்புச் சொம்பிற்குள்
வெண்ணிலா
விழுந்து கிடக்கிறது
அனாதையாய் !
எனது தேசத்தின்
கோள்களும் திசைகளும்
இடம் மாற
துக்கத்தின் விழுது
வேர் விட்டிருந்தயெனது
வெறுமைகளுக்குள்
கூடு விட்டுக் கூடு பாயும்
வித்தை கற்ற
உனது மௌனம் -
சத்தங்களேது மற்று
உடைந்து சிதறுகிறது 1
நீயற்று
தகிக்குமெனது
ராஜாங்கத்தில்
அனைவருக்கும்
கேட்ட வரத்தினை
வழங்கிவிட்டு -
சாபம் பெற்ற
ராஜாவாய்
உன் மீள் வரவின்
விமோசனம் தேடி
தவமிருக்கு மென்னுள்
உன்னை
கரைத்துக் கொண்டிருக்கிறது
காலம் .