பாப்பாவுக்கும் பெண்ணுக்கும் விடுதலை கிடைத்ததா

ஏழு வயதிலேயே
எழுதுகோலை பிடித்த
இந்த எட்டயபுரத்து
கவி எஜமானின்...!
மூளைக்கு எட்டியதெல்லாம்
கவியாச்சு...!

பொங்கிவரும் உன் கவியால்
கோடானுகோடி மக்கள்
எழுச்சியால்
குத்திட்டு நின்றனர்...!
உன் முகத்தில் உள்ள
மீசை குத்திடாதா என்ன?

விடுதலை உணர்வை
ஊரெங்கும் ஊட்டினாய்...!
உனக்கு மூணுவேளை
உணவுட்ட உடன் இல்லை
ஒரு தமிழனும்...!

வறுமையே, நீ தான்
எங்கள் பாரதிக்கு
பரம ரசிகனா?
இறுதிவரை அப்பதவியில்
அமர்ந்துகொண்டு
நீ அவனை
ஆட்டிப்படைத்தாயே...!

பெண் விடுதலைக்கு
கவி எழுதிய நீ....!
உன் வறுமையின்
விடுதலைக்கு
ஒரு கவி கொடுத்தாயா?

முண்டாசு தலைப்பாகைக்குள்
புதைந்த உன் கவிக்கடலை....!
முப்பத்தொன்பது வயதிலேயே
உனை முடித்த எமனுக்கு
ஒரு கவி கொடுத்தாயா?

தனி மனிதனுக்கு
உணவு இல்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்று சொன்னாயே....!
இன்று ஜகத்தினை அழித்துதான்
உணவு உண்ணும் நிலை...!

காக்கையும் குருவியும்
எங்கள் ஜாதி....!
கடலும் மலையும்
எங்கள் கூட்டமுன்னு...!
நீ சொன்ன பட்டியலில்
விலங்கினங்கள் இல்லையே
என யானைக்கு கோபமோ?

உனை படைத்த பரமனுக்கே
உன் அருமை தெரியலே....!
பார்த்தசாரதி கோவில்
யானைக்கு எப்படி தெரிய....!

அன்று கவி பாரதிக்கு
கவி எடுத்து கொடுக்க
தமிழ் எழுச்சியுடன்
அவன் பின் நின்றது...!
ஆனா அவன் பாடையிலே
போகையிலே.....!
பத்துத்தமிழன் கூட இல்லையே.....!

பதாதைகள் கட்டி
பாரதிக்கு விழா எடுக்கலாம்....!
பாரெங்கும் அவன் புகழ் பாடலாம்.....!
அவன் பாடிய
பாப்பாவுக்கும் பெண்ணுக்கும்
விடுதலை கிடைத்ததா?

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (12-Dec-14, 9:38 am)
பார்வை : 1341

மேலே