28 ஐசக், காந்தி, அடுத்தது நீ

மரத்தில் இருந்து பழங்கள் விழுவதை
மனிதர் பலர்பார்த்தார்!
கீழே ஏன்அவை விழணும் என்ற
கேள்வியை யார்கேட்டார்?

அரிச்சந் திரனின் நாடகத் தையும்
ஆயிரம் பேர்பார்த்தார்!
உண்மையே இனிமேல் பேசணும் என்ற
உறுதியை யார்கொண்டார்?

ஊமைப் படத்தைப் பார்ப்பது போல
உலகைப் பார்க்காதே! - அதன்
உள்ளே உறைவது என்ன என்பதை
உணர மறுக்காதே!

கண்ணைத் துடைத்துக் காட்சியைக் கண்டால்
காண்பது புதிதாகும்! - நீ
உன்னைத் துளைத்துக் கேள்விகள் கேட்டால்
உண்மை புலனாகும்!

தேடல் வேட்கை தகிக்கும் நெஞ்சைத்
தேடி ஞானம்வரும்!
ஓடும் மனதை ஒருநிலைப் படுத்து
உனக்குள் ஆற்றல்வரும்!

உற்றுப் பார்;மனம் ஒன்றிப் பார்;அதன்
சுற்றும் முற்றும்பார்!
கற்றுப் பார்!பதில் பெற்றுப் பார்!புதுக்
கேள்விகள் கேட்டுப்பார்!

தீப்பொறி போல ஒருபொறி உனது
சிந்தையில் உருவாகும்! - அது
யாரென உன்னை உலகிற்குக் காட்டும்;
யாவும் வசமாகும்!

எழுதியவர் : ராஜமாணிக்கம் (9-Jan-15, 11:12 am)
சேர்த்தது : டோனி கிறிஸ்டோபர் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 114

மேலே