ரௌத்திரம் பழகு

வழக்கம் போலவே தேநீரோடு
மடிப்புக்கலையாமல் வந்துவிட்டிருந்தது
அன்றைய செய்தித்தாள் ..

அடுத்த பத்து வருடங்களுக்கான
புல்லுக்கட்டுக்கு
மந்தை மாறியிருந்தது ஆடு...
ராச தந்திரமென சொல்லப்பட்டிருந்தது
அது ..

யாரோ ஒருத்தியின்
முலைப்பரப்பில் எவனோ ஒருவன்
திராவகம் ஊற்றியிருந்தான்..
அதற்கு சாதிவெறி என்று
பெயரிட்டிருந்தார்கள்.. அச்சடித்தவர்கள்..

பசிக்கொடுமையில் ரொட்டி
திருடியவன் புகைப்படம் சொன்னது..
அவனுக்குப் பசித்தது என்று..
விரட்டிப் பிடித்த காவல்
துறையென... கண்ணியமாய் செய்தியும்...

எதற்காகவோ பணிய
மறுத்திருந்த நடிகை ஒருத்தி
விபச்சாரம் செய்திருந்தாள்... அதற்கு
அடுத்த கட்டத்தில் அவளின்
போட்டி நடிகை நகைக்கடை திறந்திருந்தாள்...

அரைப்பக்கத்தை ஆக்கிரமித்திருந்தது
காயம்பட்டிருந்த ஒரு
கிரிக்கெட் வீரனின் கட்டைவிரல்...
புகைப்படம்..இந்தியாவிற்கு பின்னடைவு
எனச் செய்தி சொல்லியிருந்ததில் எதில் என
எனக்குப் புரியவில்லை...

மீதமிருந்த அரைப்பக்கம்
தள்ளுபடியில் செல்போன் விற்றது....

ஒவ்வொன்றுக்குமாக..
சிரித்தேன்..நெற்றி தேய்த்தேன்...
கைப்பிடியில் கைகுத்தினேன்..
தொடர்ந்தே வந்தன.. அடச்சேவும் ..
அச்சச்சோக்களும்..

தலையிலடித்துக் கொண்டே
தீர்ந்திருந்த குவளை எடுத்துப்போனாள்
மனைவி... எல்லைச்சுவர்
எட்டிப்பார்த்து உதடுபிதுக்கி
குனிந்துகொண்டான்.. பக்கத்து வீட்டுக்காரன்...

நானும் மௌனமாய்
இருந்திருக்கலாமோ.....?!!

எழுதியவர் : நல்லை.சரவணா (11-Jan-15, 3:23 pm)
Tanglish : rowthiram pazhaku
பார்வை : 416

மேலே