அம்மாக்கள் அறிவார்கள்
வெள்ளிக் கிழமைகளில்
வீடு திரும்பும் குழந்தைகள்
அம்மாக்களின் இடுப்பைக்
கட்டிக்கொள்கிறார்கள்
கழுத்தை வளைத்துக்
கன்னத்தில் முத்தமிடுகிறார்கள்
கண்களை மூடச் சொல்லி
ஐந்து விரல்களையும் விரிக்கிறார்கள்.
பிறகு, ஒவ்வொன்றாக
மூன்று விரல்களை மடித்து
கண்களைத் திறக்கச் சொல்கிறார்கள்.
இரண்டு விரல்களை மட்டும் உயர்த்தி
இடதும் வலதுமாக அசைத்து
'டூ டேய்ஸ் லீவ்'
எனக் கூறும் குழந்தைகளின்
குதூகலத்தை
அம்மாக்கள் மட்டுமே
அறிகிறார்கள்!