நிதர்சனப்பிடியில்-ரகு

நிர்கதியாய்ச் சாலையில் திரிவோர்
ஒற்றையிலக்கமாய் நீர்த்துப்போயிருந்தனர்
சுவர்களில் பருக்கைகளுக்காய் யாசகமிட்டுக்
காத்திருக்கும் காக்கைகளைக் காணவில்லை
தொட்டிமீன்கள் கடலில் நீந்துவதை மழைநாளில்
வானவில் பார்த்து மெருகேற்றிக்கொண்டது
சிட்டுக்குருவிகள் சிலாகித்துத் திரியுமிடத்தில்
கலவரப் புகைப்படங்கள் உள்ளிட்ட ஓவியக் கண்காட்சி
குடிசைகளற்ற வீதியில் கோலாகலமாயத்
தொடங்கிற்று உழவுமாடுகளின் அணிவகுப்பு
நான் நிதர்சனப்பிடியில் சிக்கிகொள்ளுமளவு
கடித்தக் கட்டெறும்பு அறிந்திருக்க வாய்ப்பில்லை
இப்போதும் உடைந்துபோனக் கனவுக்குமிழ்பற்றி !

எழுதியவர் : அ.ரகு (25-Feb-15, 7:03 pm)
பார்வை : 116

மேலே