கூடிழந்த பறவையாய்
குளத்தங்கரை படித்துறையும்...
குளுகுளுக்கும் வேப்பமரமும்...
இன்றும் சுமக்கின்றன
நம் காதலின் சுவடுகளை..!
கருப்பர் கோவில் பூவரசு
கண்ணியமாய் சுமக்கிறது
மடி சாய்ந்த பொழுதுகளின்
நினைவுகளை..!
ஆவாரம் செடி தாலாட்டும்
ஒற்றையடிப் பாதை..
இன்னும் இசைக்கிறது
நீயும் நானும் கைகோர்த்து
நடந்த நாட்களின்
சந்தோஷங்களை..!
பிள்ளைகள் ஆடும்
ஆலமர விழுதுகள்
ஆராவாரமாய் சுமக்கின்றன
முதல் முத்தத்தின் ஸ்பரிசத்தை..!
கடக்கும் ஒவ்வொன்றும்
கடத்தாமல் வைத்திருக்கின்றன
நம் காதலின் தாக்கத்தை..!
நீயும் நானும் கடத்தி விட்டோம்...
காதலின் வாழ்க்கையை
காலத்தின் பாதையில்..!
எப்போதாவது சந்திக்கிறோம்...
எதாவது பேசுகிறோம்...
இதயம் மறந்த புன்னகையோடு..!
சிநேகமாய் சிரிக்கிறார்கள்
இதயத்தில் இடை புகுந்தவர்கள்...
கூடி விளையாடுகின்றன
வாழ்வின் வசந்தங்கள்..!
எல்லாம் சந்தோஷமாக...
எல்லாரும் சந்தோஷமாக...
ஏனோ மனசு மட்டும்
தவிக்கிறது...
கூடிழந்த பறவையாய்...!
-'பரிவை' சே,குமார்.

