திருவலிவலம் பதிகம் 5

முதல் திருமுறையில் 123 வது தலமாக ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருவலிவலம் பதிகத்தில் 5 ஆம் பாடல்.

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே!

ஈற்றுச்சீர் (புளிமா) தவிர மற்ற 15 சீர்களும் கருவிளச் சீராலும், நிரையொன்றிய ஆசிரியத் தளைகளாலும் நான்கு அளவடிகளில் திருஞானசம்பந்தர் பாடிய கலிவிருத்தம்.

பொருளுரை:

மிகுதியாக வழங்கும் கொடையே தமக்கு அழகைத் தரும் என நினையும் வள்ளற் பெருமக்கள் வாழும் வலிவலத்தில் உறையும் இறைவன், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ள, தான் ஆண் யானையின் வடிவு கொண்டு தன் திருவடியை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் களைய தெய்வத்தன்மையுடைய கணபதியைத் தோற்றுவித் தருளினான்.

குறிப்புரை:

உமாதேவி பெண்யானையின் வடிவுகொள்ள, ஆண்யானையின் வடிவத்தைத் தாம்கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம் பற்றிய இறைவன் வலிவல நகரான் என்கின்றது.

பிடி - பெண்யானை. கரி - ஆண்யானை.

கடி கணபதி - தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான்.

கொடைவடிவினர் - வள்ளற் பெருமக்கள்.

குறிப்பு:

திருவலிவலம்:

இறைவர் பெயர் இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்,

இறைவியின் பெயர் வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி,

தல மரம் - புன்னை, தீர்த்தம் - சங்கர தீர்த்தம்.

தல வரலாறு: வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.

சூரியன், வலியன், காரணமாமுனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

சிறப்புகள்: வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.

இது கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்.

தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.

கோவிலுக்குச் செல்லும் வழி:

தமிழ் நாட்டில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம்.

திருவாரூரிலிருந்து 10-கி. மீ. தொலைவிலுள்ள இக்கோவிலுக்கு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் வரலாம்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Apr-15, 10:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 204

சிறந்த கட்டுரைகள்

மேலே