வாசித்து பின் யோசிப்போம்

ஆண் கிளி ஒன்று
பெண் கிளி ஒன்று
குட்டிக்கிளிகள் இரண்டு
சின்னதாய் ஒரு மரவீட்டிற்குள்
ஒண்டிக்குடித்தனம்....
பேச்சுக்கு
பக்கத்து மரத்து
காக்காத் தோழிகள்..
அப்பப்ப வந்து
பார்த்து விட்டு போகும்
அணில் மாமா...
எப்போதாவது வந்து
பயமுறுத்தும்
கழுகு தாத்தா....
பாட்டுப்பாடி
இன்னிசை வகுப்பெடுக்கும்
குயில் அக்கா....
சிறு சிறு தீனிகள்
எடுத்து வந்து மகிழ்ச்சி படுத்தும்
குருவி மச்சான்....
அவ்வப்போது தழுவும் தென்றலுடனும்
மாலைகளில் பெய்யும் சாரலுடனும்
அழகாய்த்தான் போய்க்கொண்டிருந்தது
அவர்களின் வாழ்க்கை...
ப்ளாட் போட்டு விற்றுவிட முடிவெடுத்து
அழகான அந்த தோட்டத்தின் மரங்களை
மனிதன் வெட்டும்வரை...