சிலந்தி வலை
உன்னை எப்பொழுது பார்த்தேன்?
உறக்கம் தொலைந்து கூவுகிறது இருட்டு.
திறந்து வைத்த ஜன்னல்கள்
என்னோடு விழித்திருக்க....
நினைவுகளின் வரிசை குலைந்து சிடுக்குகள்.
பாதை சிக்கலாகி...
முடிவு நிச்சயமற்றதாகிவிட ...
இடம் பெயர்கிறது எனது நாட்கள்.
எனக்குள் தேங்கிவிட்ட உனக்கான சொற்கள்..
அலைந்து திரிகிறது இன்னமும்
காற்றில் அலையும் சிறகென.
நீ தவிர்க்க விரும்பாத
கோபத்தின் பின்னால்...
அலைகிறேன் ஒரு குழந்தையென.
காலியிடங்களை விட்டுச் செல்லும்
நம் காலத்தை நீ நிரப்ப முயல்கையில்...
என் குரல் உனக்கும் கேட்கக்கூடும்
ஒரு சிலந்தி வலையிலிருந்து.